புதன், 2 அக்டோபர், 2024

சிறுமி பலாத்காரம் - சிபிஐக்கு மாறிய வழக்கு - புகாரளித்த பெற்றோரை கொடுமை செய்த சென்னை இன்ஸ்பெக்டர்!

 tamil.oneindia.com -  Nantha Kumar R :  சென்னை: சென்னை அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தான் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க போலீஸ் நிலையம் சென்ற சிறுமியின் பெற்றோருக்கு நேர்ந்த கொடுமை பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் 10 வயது சிறுமி. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி சிறுமி திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதன்பிறகு இந்த விவகாரம் சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் அவரது பெற்றோர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுவன் மீது புகாரளித்தனர். இதையடுத்து சிறமியின் பெற்றோரை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அளித்து போலீசார் திட்டி தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தங்களின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்ததோடு, குற்றம்சாட்டுக்கு உள்ளானவரின் பெயரை நீக்கும்படி போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

இதனால் சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக வெளியிட்டனர். இந்த வீடியோவை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதேபோல் சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளும் நேற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் போக்சோ வழக்கின் விதிகள் மீறப்பட்டுள்ளது. சிறுமியிடம் மருத்துவமனை லிப்ட் அருகே வைத்து வாக்குமூலம் பதிவு செய்தது தவறு. இந்த வழக்கில் காவல்துறை விசாரணை மீது சிறுமியின் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டது என்பது பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து கூறுவதை புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்யப்படுகிறது என அதிரடியாக உத்தரவிட்டனர்.

இத்தகைய சூழலில் தான் தற்போது பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் பெற்றோருக்கு காவல் நிலையத்தில் நேர்ந்த கொடுமை பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட நபரின் முன்பு வைத்து புகாரளித்த சிறுமியின் அப்பா - அம்மா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதன்பிறகே பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டு தங்களின் பிரச்சனைகளை கூறியுள்ளனர். இதை பார்த்து தான் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே வழக்கை கையில் எடுத்து விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை: