வெள்ளி, 22 ஏப்ரல், 2011

பகவான் சத்தியசாயிபாபா ஜீவசமாதி என்று பரவிய வதந்தியால் பக்தர்கள் புட்டபர்த்தி நோக்கி படையெடுப்பு!

புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா உயிருடன் சமாதியாகப் போவதாக பரவிய தகவலை அடுத்து நேற்று பகவானின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் ஒன்று கூடியதுடன் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள். பெருமளவிலான பக்தர்கள் சாயிபாபாவின் ஆஸ்பத்திரி முன் திரண்டதுடன் வீதிகளில் சாயிபாபாவின் படத்துடன் கண்ணீருடன் ஊர்வலம் வந்தனர்.

பகவானின் உண்மை நிலையை அறியாமல் இந்த இடத்தை விட்டு செல்லப் போவதில்லை என அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க கூறினர். இதனால் புட்டபர்த்தியில் பகவானின் ஆச்சிரமம் உள்ள பகுதியிலும் பகவானின் வைத்தியசாலை உள்ள பகுதியிலும் பெரும் பரபரப்பு நிலவியது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாது பாதுகாப்பு பிரிவினர் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.
உலகெங்கிலும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்டவர் ஸ்ரீ சத்திய சாயி பாபா ஆன்மிக குருவாகத் திகழும் இவர் பல்வேறு அரிய செயல்களை நிகழ்த்திக் காட்டியவர். இவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். புட்டபர்த்தி என்ற வரண்ட குக்கிராமத்தை இன்று உலகம் முழுவதும் தெரியும் நகரமாக மாற்றிய பெருமை சாயிபாபாவிற்கே உரியது. சுகாதாரம், குடிநீர், ஏழைகளுக்கு உதவி என பல்வேறு துறைகளில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு உதவிகளைச் செய்தவர் சாயிபாபா. சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு அவர் தந்த உதவி மிகப் பெரியது.
அந்தக் கால்வாய் முழுவதையும் சீரமைக்க ஆகும் செலவை பாபா ஏற்றார். சென்னையை நாறடிக்கும் கூவத்தைச் சுத்தப்படுத்த ஆகும் செலவை ஏற்கவும் அவர் முன்வந்தார். இந்த நிலையில் சாயிபாபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதயக் கோளாறு, சுவாசக் கோளாறு காரணமாக புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு சிறுநீரக கோளாறும் ஏற்பட்டதால் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணித்து வருகிறார்கள். 24 மணி நேரமும் டாக்டர்கள் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.
சாயிபாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து உறுப்புகளும் எந்திரம் மூலம் இயங்க வைக்கப்படுகின்றன. செயற்கை சுவாசம் தான் அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் சாயிபாபா உடல்நிலை சீராக இருப்பதாகவும் என்றாலும் கவலைக்கிடமான நிலையிலேயே அவர் உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சாயிபாபா ஜீவசமாதி அடையப் போவதாக தகவல் பரவியது.
சாயிசேவா தள உறுப்பினர் ஒருவர் உள்ளூர் தொலைக்காட்சிக்கு இவ்வாறு பேட்டி அளித்தார். சாயிபாபா ஜீவசமாதி அடைய இருப்பதாகவும் இதுபற்றி சாய் டிரஸ்ட் முறையான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
ஆனால், இது வெறும் வதந்தி என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சாய் டிரஸ்ட்டின் தலைமை அலுவலகமான பிரசாந்தி நிலையம் அறிவித்தது. ஆந்திர அரசு அதிகாரிகளும் இந்த தகவலை மறுத்தனர். சாயிபாபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கருத்து வேறுபாடு இதற்கிடையே சாய் டிரஸ்ட் உறுப்பினர்களில் ஒருவரும் சாயிபாபாவின் சகோதரர் மகனுமான ரத்னாகருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: