புதன், 9 பிப்ரவரி, 2022

பாகிஸ்தானில் ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபர்

 மாலைமலர் : இஸ்லாமாபாத்:.ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபரை பெஷாவர் போலீசார் தேடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் உறவுகள் மூலமும் அரங்கேறும் கொடூரமும் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
பாகிஸ்தானில் வசிக்கும் பெண் ஒருவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதையடுத்து, அடுத்து பிறக்கப் போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கூறியுள்ளார். அவரும் கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்துள்ளார்.


இதற்கிடையே, கர்ப்பிணி பெண் தலையில் ஆணி அடித்த புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதையடுத்து, பெஷாவர் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆணி அகற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், அந்தப் பெண்ணின் தலையில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது. சுத்தியல் மூலம் அந்த ஆணியை அடித்திருக்க வேண்டும். அவரது தலையில் 2 இஞ்சுக்கு அதிகமாக ஆணி புகுந்திருந்தது எக்ஸ்ரேவில் தெரிந்தது. ஆணியின் முனை மூளையில் பட்டிருந்தால் பெரும் பாதிப்பு உண்டாகி இருக்கும் என தெரிவித்தனர்.

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை: