புதன், 5 ஏப்ரல், 2023

கழிவுநீர் மரணத்தில் தமிழ்நாடு முதலிடம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!

 tamil.oneindia.com -  Vignesh Selvaraj  :   டெல்லி : கழிவுநீர் தொட்டிகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
கழிவு நீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது சட்டவிரோதம் என்றபோதும், மலக்குழி மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், சாக்கடை மற்றும் கழிவுநீர் மரணத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 308 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது தெரிவித்துள்ளார்.



அதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 52 பேரும், உத்தர பிரதேசத்தில் 46 பேரும், ஹரியானாவில் 40 பேரும், மகாராஷ்டிராவில் 38 பேரும், டெல்லியில் 33 பேரும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது இறந்துள்ளனர் என மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

சாக்கடை மற்றும் கழிவு நீர் மரணத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை: