வெள்ளி, 29 ஏப்ரல், 2022

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு... சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்

 tamil.asianetnews.com  : சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு தூக்கு தண்டனையும் அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு தூக்கு தண்டனையும் அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள 15 வயது சிறுமிக்கு தனது தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து தகவல் அறிந்த தனியார் தொண்டு நிறுவன ஊழியர் சிறுமியின் தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார் அளித்தார். அந்த தொண்டு நிறுவன உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 வயது முதல் 15 வயது வரை தந்தை சூரியன், பாலியல் வன்கொடுமை செய்ததாகும், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமி கர்ப்பமடைந்த போது தனது தாயிடம் தெரிவித்த போது கருவை களைத்து, இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிறுமியின் தந்தை சூரியன் மற்றும் தாய் மாதவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுக்குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. அந்த வகையில் இன்று போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றசாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி, காவல்துறையினர் தரப்பில் நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து முதல் குற்றவாளியான தந்தை சூரியனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தாய் மாதவிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பு அளித்தார். தனது சொந்த மகளையே பாலியல் தொந்தரவு செய்த தந்தைக்கு தாயும் உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: