புதன், 27 ஏப்ரல், 2022

தஞ்சை தேர் திருவிழா விபத்து- 11 பேர் உயிரிழப்பு 10 பேர் காயம் .. அப்பர் குரு பூஜை விழாவில்

  Vishnupriya R  -   Oneindia Tamil :  தஞ்சை: தஞ்சையில் அப்பர் குருபூஜை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து நடைபெற்றது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்
தஞ்சை மாவட்டத்தில் களிகாடு பகுதியில் உள்ளது அப்பர் கோயில். இங்கு ஆண்டுதோறும் அப்பர் குருபூஜையையொட்டி சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தேர் நள்ளிரவில் இழுக்கப்பட்டு அதிகாலை 3 மணி வரை நிகழ்வு நடைபெறும்.
இதுவரை 93 ஆண்டுகள் வெற்றிகரமாக இந்த தேர்த் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு 94 ஆவது ஆண்டு விழா தொடங்கியது. நேற்று முதல் 3 நாட்களுக்கு இந்த விழா கோலாகலமாக நடைபெறும்.

தஞ்சை அப்பர் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி.. மேலும் 10 பேர் காயம் தஞ்சை அப்பர் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி.. மேலும் 10 பேர் காயம்

இந்த விழாவில் முதல் நிகழ்வே தேர் பவனிதான். இது நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 முதல் 4 மணிக்குள் முடிவடையும். சிறிய சப்பரத்தில் சுவாமி சிலை வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தேர் இழுத்து செல்லப்பட்ட வண்டியில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்தது. தேர்த் திருவிழாவின் போது தேரை இழுப்போரின் கால்களுக்கு மக்கள் தண்ணீரை ஊற்றுவது வழக்கம். இந்த நிலையில் ஒரு இடத்தில் தேரை திருப்புவதற்காக பக்தர்கள் முயற்சித்தனர்.

அப்போது மேலே உயர்மின் அழுத்த கம்பிகள் தேரின் மீது உரசாமல் இருக்க அதை சரி செய்தனர். அப்போது ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த தேரின் ஒரு பகுதி லாக்காகிவிட்டது. இதனால் எடை தாங்கமுடியாமல் தேர் பின்னோக்கி இழுத்து செல்லப்பட்டு உயர் மின் வயரில் உரசியது.

அப்போது தேரை வடம் பிடித்தவர்கள், தேரில் அமர்ந்து தீபாராதனை காட்டியவர்கள், தண்ணீர் ஊற்றிக் கொண்டு வந்தவர்கள் என அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். பலருக்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 11 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. இந்த தேர் திருவிழாவிற்கு தீயணைப்பு துறையினரிடம் முன் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

ஊரில் எந்த நிகழ்வாக இருந்தாலும் முன்னிருந்து செய்யும் முன்னாள் ராணுவ வீரர் பிரதாப், செல்வம் ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய மண்டல ஐஜி விசாரணை நடத்தி வருகிறார். 94 ஆண்டுகளில் முதல்முறையாக இது போன்ற ஒரு விபத்து ஏற்பட்டு அனைவரது மகிழ்ச்சியையும் அழுகைகளாலும், கதறல்களாலும் மாற்றிவிட்டது.

கருத்துகள் இல்லை: