சனி, 1 டிசம்பர், 2018

பொன் மாணிக்கவேல் தேவதூதனா ?

savukkuonline.com : இன்று பொன் மாணிக்கவேல் பணியிலிருந்து ஓய்வு பெறும் கடைசி நாள்.   அவருக்கு 60 வயது நிறைவடைந்து விட்டது. பணி நிறைவடைகையில் அவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்தார். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதுதான், யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.  அதில், சிலை கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும், வழக்கு தொடுக்கிறார்.  அந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, ரயில்வே ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேலை நீதிமன்றம் முன்பு ஆஜராகச் சொல்லி உத்தரவிடுகிறார் நீதிபதி மகாதேவன். அப்போது பொன் மாணிக்கவேல் சொன்னதாக கீழ்கண்டவாறு எழுதுகிறார் மகாதேவன். ‘

It was pointed out by the upright officer that all efforts were being taken to nab the accused delinquent officer Khader Basha.
காதர் பாட்சா அதுவரை கைது செய்யப்படவில்லை என்பது உண்மைதான்.  பொன்.மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என்பது நீதிபதி மகாதேவனுக்கு எப்படி தெரியும் ?
பொன் மாணிக்கவேல் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும். அவ்வாறு 21 ஜுலை 2017 அன்று உத்தரவிடுகிறார்.
பொன் மாணிக்கவேலைப் போன்ற ஒரு நாடக நடிகரை பார்க்கவே முடியாது.   காவல்துறை அதிகாரி யூனிபார்ம் அணிந்து, இம்சை அரசன் படத்தில் வடிவேலுவைப் போல ஒரு மீசை வைத்துக் கொண்டு, பொன்.மாணிக்கவேல் காவல்துறையில் அடித்த லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இப்படிப்பட்ட ஒரு நபருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நற்சான்று கொடுத்து, அவர் தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டால்,  மறை கழன்ற நபர் எப்படி நடந்து கொள்வார் ?  அப்படித்தான் பொன்.மாணிக்கவேலும் நடந்து கொண்டார்.
பத்திரிக்கையில் செய்தி வரவேண்டும் என்பதற்காகவே புலனாய்வு நடத்துவது.  குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவது கிடையாது.  எந்த உயர் அதிகாரிகளையும் மதிப்பது கிடையாது.  யாருக்கும் அறிக்கை அனுப்புவது கிடையாது.  தான்தோன்றித்தனமாக, மனதுக்கு பட்டவற்றையெல்லாம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு வழக்கில் கைது என்பது தேவையான சமயத்தில் மட்டுமே.  Bail is the right, Jail is exception என்ற நியதி, சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   ஆனால், பொன்.மாணிக்கவேலுக்கு எடுத்த எடுப்பில் கைதுதான்.
யார் இந்த பொன்.மாணிக்கவேல்
ஏப்ரல் 1996ல், சென்னை மைலாப்பூரில் ஒரு கொலை நடக்கிறது. இறந்து போன நபரின் பெயர் எம்எஸ்.பாண்டியன்.  இவர் ஒரு ஆடிட்டர்..  இவர் ரியல் எஸ்டேட் தவிர பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.  இவரது நெருங்கிய நண்பராக இருந்தவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து, தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள  செல்வம் என்ற செல்வப் பெருந்தகை.  இருவரும் இணைந்து, வழக்குகளில் சிக்கியுள்ள பல்வேறு சொத்துக்களை வாங்குவது விற்பது என்று இருக்கின்றனர்.
இவர்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பர்தான் அப்போது டிஎஸ்பியாக இருந்த பொன்.மாணிக்கவேல்.  இவர்கள் மூவருக்குள்ளும் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது.
பொன்.மாணிக்கவேலின் மனைவி பெயரி திலகவதி.   பொன்.மாணிக்கவேலின் மனைவி திலகவதியும், கொலையான எம்எஸ்.பாண்டியனும் இணைந்து, சென்னை தியாகராய நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் வங்கி லாக்கர் ஒன்றை வைத்திருந்தனர்.
பாண்டியன் 4 ஏப்ரல் 1996 அன்று இறந்து போகிறார்.  அதே நாளன்று இரவு, பொன்.மாணிக்கவேலின் மனைவி திலகவதி அந்த லாக்கரை திறந்து, அதில் உள்ளவற்றை காலி செய்து விட்டு கணக்கை மூடுகிறார்.  அந்த லாக்கரில் என்ன இருந்தது என்பது குறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
இறந்து போன பாண்டியன், பொன் மாணிக்கவேல் மற்றும், எம்ஜி.தேவர் என்ற அந்த வழக்கின் சாட்சி ஆகியோர், கொலை நடந்த 04.04.1996 அன்று விடியற்காலை 2 மணி வரை மது அருந்தியுள்ளனர்.  ஆனால் விசாரணையில் பொன்.மாணிக்கவேல் இரவு 11 மணி வரைதான் கொலையுண்ட பாண்டியனோடு இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.  எப்படி பார்த்தாலும், பொன்.மாணிக்கவேல் அந்த வழக்கில் சாட்சியாகவாவது விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும்.  ஆனால் அவர் சாட்சியாக சேர்க்கப்படவில்லை.   அந்த லாக்கரில் என்ன இருந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை.
பொன்.மாணிக்கவேலையும், அவர் மனைவி திலகவதியையும், தி.நகர் பேங்க். ஆப் இந்தியா மேலாளரையும் விசாரிக்காதது வழக்கை கடுமையாக பாதித்துள்ளது என்று கூறி, சந்தேகத்தின் பலனை அளித்து, பாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் சென்னை விரைவு நீதிமன்றம், 6 நவம்பர் 2003 அன்று விடுவித்தது.
வழக்கு ஆவணங்கள்


ஏன் இந்த வழக்கில் முழுமையான புலன்விசாரணை நடத்தப்படவில்லை என்பதற்கான காரணம், பொன்.மாணிக்கவேல் தேவர் என்பதும், 2001ல், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, காவல்துறையும் ஆட்சியும் முழுமையாக மன்னார்குடி மாபியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதும்தான்.
பொன்.மாணிக்கவேல், செங்கல்பட்டில் உளவுப் பிரிவு டிஎஸ்பியாக 1997ம் ஆண்டு பணியாற்றினார்.   அப்போது, மாங்காடு காவல் நிலைய கட்டுப்பாட்டில், ஒரு கொலை நடக்கிறது.   வீட்டில் இருந்த ஒரு பெண்ணை கொலை செய்து, 193 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.  மாங்காடு காவல் நிலையத்தில் குற்ற எண் 638/97 பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணை தொடங்குகிறது.
மாங்காடு காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் கருப்பையா என்பவர் புலன் விசாரணையை தொடங்குகிறார்.   இந்த கொலையை செய்தது ஜஸ்டின் என்ற ஒருவன் என்பதை உடனடியாக கண்டறிந்து, அவனை கைது செய்கிறார்.  அவனிடமிருந்து அனைத்து நகைகளும் கைப்பற்றப்படுகின்றன.  கைப்பற்றப்பட்ட நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு பதிலாக, கருப்பையா, ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு அறைக்கு அந்த நகைகளை எடுத்து செல்கிறார்.
பொன்.மாணிக்கவேல், சில நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மீத நகைகளை ஒப்படைக்கிறார்.   விவகாரம் வெளியே வந்ததும் கருப்பையா விசாரிக்கப்படுகிறார்.  கருப்பையா விசாரணையில் அனைத்து உண்மைகளையும் ஒப்புக் கொள்கிறார்.   செயின்ட் தாமஸ் மவுண்ட் குற்றப் பிரிவில், நகைகள் காணாமல் போனதற்கு தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது (குற்ற எண் 24.97)/  இந்த வழக்கின் விசாரணை சிபி.சிஐடிக்கு அனுப்பப்படுகிறது.   இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருக்கையிலேயே மீண்டும் 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிறார்.  இந்த வழக்கும் விசாரணையின்றி முடிக்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்கில் தொடக்க காலத்தில் விசாரணை நடத்திய சிபி.சிஐடி டிஎஸ்பியின் 05.12.1998 நாளிட்ட அறிக்கை, இன்னும் அரசு ஆவணங்களில் உள்ளது.  அதில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை.  பொன்.மாணிக்கவேல் நகைகளை திருடியது உண்மை என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பிறகு, பொன்.மாணிக்கவேல் பணியாற்றிய இடங்களிலெல்லாம் மாமூல் வாங்குகிறார் என்று பல்வேறு உயர் அதிகாரிகள் அனுப்பிய ரகசிய அறிக்கைகளையெல்லாம், நடவடிக்கை இன்றி மூடுவதற்கு பொன்.மாணிக்கவேலுவுக்கு மன்னார்குடி மாபியாவின் துணையால் முடிந்தது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு
பொன் மாணிக்கவேல் காவல்துறையில் சேர்ந்ததால் உருவாக்கப்பட்ட பிரிவு அல்ல சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு.   1983ம் ஆண்டே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு உருவானது.   1976ம் ஆண்டு, தஞ்சை விஸ்வநாத சுவாமி கோவிலில் உள்ள விக்கிரகம் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.   இது கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு சுவையான கதை.  இந்தியாவில் தென் இந்திய சிற்பங்கள் என்று ஆராய்ச்சி செய்வதற்காக வந்த டக்லஸ் பெர்ரெட் என்பவர்தான் தஞ்சை கோவிலில் உள்ள நடராஜர் சிலை போலி என்று தன் நூலில் எழுதுகிறார்.  அதன் பிறகு, தஞ்சை கொரடாச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.   ஸ்காட்லான்ட் யார்டு காவல் துறை, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து இந்த சிலையை மீட்டுத் தந்தது.  கேகே.ராஜசேகரன் நாயர் சிபி.சிஐடி ஐஜியாக இருந்தபோது இந்த சிலை மீட்கப்பட்டது.
1986ம் ஆண்டு, சிவப்புரத்தில் உள்ள சிவகுருநாதசாமி கோவிலில் இருந்து காணாமல் போன நடராஜர் சிலை, அமெரிக்காவில் உள்ள கிம்பெல் அருங்காட்சியகத்திலிருந்து 1986ம் ஆண்டு மீட்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து எண்பதுகளில் 250க்கும் மேற்பட்ட திருடப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன என்று தெரிவிக்கிறார்கள் சிபி.சிஐடியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள்.  1994ம் ஆண்டு, வைகுந்த் மற்றும் ராஜகோபாலன் ஆகியோர் சிபி.சிஐடி தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, 92 சிலைகளை மீட்டனர்.
சிபி.சிஐடி ஆவணங்களின்படி, 2007ம் ஆண்டு மட்டும் 30 சிலைகள் மீட்கப்பட்டன.  2008ல் 16 சிலைகள், 2009ல் 22 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.  2009ம் ஆண்டு திலகவதி சிபி.சிஐடி தலைவராக இருந்தபோது, விலை மதிப்பில்லாத, திருத்துரைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரும் மதிப்புடைய மரகதலிங்கம் மீட்கப்பட்டது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, பொன்.மாணிக்கவேலுக்கு முன்பாகவும் இருந்தது, பிறகும் இருக்கும்.  இதை மகாதேவன்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
பொன்.மாணிக்கவேல் என்ன கண்டுபிடித்தார் ?
இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒரு ஆவணத்தின்படி, 1992 முதல் 2017 வரை, தமிழகத்தின் 387 கோவில்களில் இருந்து 372 கற்சிலைகளும், 832 உலோக சிலைகளும் காணாமல் போயுள்ளதாக கூறுகிறது.   ஆறரை ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்த பொன்.மாணிக்கவேல் இதில் எத்தனை சிலைகளை  கண்டுபிடித்துள்ளார் ?
19 மார்ச் 2017 அன்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொன்.மாணிக்கவேல், சேலம் பால் பண்ணை அருகே 7 கிலோ எடையுடைய, 25 கோடி மதிப்பிலான மரகதலிங்கம் சிலை மீட்கப்பட்டதாகவும், அது திருவாரூர் சிவன் கோவிலை சேர்ந்தது என்றும் கூறினார்.
6 ஏப்ரல் 2017 அன்று 300 கிராம் எடையுள்ள 50 லட்சம் மதிப்பிலான மரகதலிங்கம் கும்பகோணத்தில், கடத்தல்காரர்களிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.
24 பிப்ரவரி 2017 அன்று, கடலூர் மஞ்சக்குப்பத்தில், 4 கோடி மதிப்பிலான விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார் பொன்.மாணிக்கவேல்.
6 நவம்பர் 2017 அன்று பொன்.மாணிக்கவேல்  தலைமையிலான காவல் படை, ஈரோட்டில் இருந்து 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு மரகதலிங்கம் மற்றும் ஒரு மரகதநந்தி  கைப்பற்றப்பட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.  பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல் கைப்பற்றப்பட்ட மரகதலிங்கம் 1200 வருடம் பழமையானது என்றும், 7 கோடிக்கும் அதிகமான மதிப்பிலானது என்றும் கூறினார்.
இந்த சிலைகள் எத்தனை பழமையானது, எந்த வருடத்தை சேர்ந்தது, எந்த கோவிலை சேர்ந்தது என்ற விபரங்களை இந்து சமய அறநிலையத் துறை அல்லவா சொல்ல வேண்டும் ?  பொன்.மாணிக்கவேல் சிலை மதிப்பீட்டாளரா அல்லது காவல் துறை அதிகாரியா ?

ஒரு குற்றவாளியை கைது செய்து, அவனிடமிருந்து வழக்கு சொத்துக்களை கைப்பற்றி, உரிய சாட்சிகளை நீதிமன்றத்தில் ஏற்றி, அவனுக்கு தண்டனை வாங்கித் தருவது என்பது ஒரு கலை.  அதை சில அதிகாரிகளே செய்ய முடியும். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கித் தந்த நல்லம்ம நாயுடுவைப் போல.  பகட்டுக்காக வேலை செய்யும் சிங்கம் சூர்யாவைப் போன்ற பொன்.மாணிக்கவேல்களால் அதை ஒரு நாளும் செய்ய முடியாது.
Global Financial Integrity என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அமைப்பு, சிலை வர்த்தகம் மட்டும் வருடத்துக்கு 40 ஆயிரம் கோடிக்கு நடப்பதாக மதிப்பிட்டுள்ளது. இவற்றில் இந்திய சிலைகளுக்கே மதிப்பு அதிகம்.  UNESCO நிறுவனம், இந்தியாவிலிருந்து 50 ஆயிரம் சிலைகள் 1989ம் ஆண்டு முதல் கடத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடுகிறது.
இந்தியா அல்லாமல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், கடத்தப்பட்டவையா என்பதை கண்டறிந்து உரிய நாடுகளிடம் அதை சேர்க்கவே செய்கின்றன.
சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய சிலைகளை மீட்பதற்கான முயற்சி தொடங்கியது 2007ம் ஆண்டில்.  2007 முதல், இன்டர்போல் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளோடு கடிதப் போக்குவரத்து, நேரில் சென்று கலந்தாலோசனை என்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகுதான் அவை மீட்கப்பட்டன.
பொன்.மாணிக்கவேலுக்கு முன்பு இருந்து அதிகாரிகள் எடுத்த முயற்சிகளினால்தான் சுபாஷ் கபூர் என்ற பெரிய சிலை கடத்தல் திருடன் கைது செய்யப்பட்டான்.   சிபிஐ உதவியோடு இன்டர்போலின் கேட்டலாகில் ஒரு சிலையின் படம் திருடப்பட்டதாக வந்தால், அதை வைத்திருக்கும் அருங்காட்சியகங்கள் அதை திரும்ப ஒப்படைக்கின்றன.
பொன்.மாணிக்கவேலுக்கு முன்பாக பல்வேறு அதிகாரிகள் எடுத்த முயற்சிகளே இன்று பல்வேறு சிலைகள் இந்தியா திரும்புவதற்கான காரணம்.
யானை ராஜேந்திரன்
சென்னை உயர்நீதிமன்றத்தில்  யானை ராஜேந்திரன் என்று ஒரு டுபாக்கூர் வக்கீல் இருக்கிறான்.  சொல்லிக் கொள்வது போல எந்த ப்ராக்டிசும் கிடையாது.   ஆரம்ப காலத்தில் யானை வழித்தடங்களில் ரிசார்ட்டுகள் கட்டுகிறார்கள் என்று பொதுநல வழக்கு போட்டு, அதனால் யானை ராஜேந்திரன் என்று பெயர் வந்து, பின்னர் தன் பெயரோடு யானையை கெசட்டில் பதிவிட்டு சேர்த்துக் கொண்டான்.

யானை ராஜேந்திரன்
விளம்பரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய நபர்தான் யானை ராஜேந்திரன்.  பணத்துக்காகவும்.  பிடி.தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதியாகக் கூடாது என்று அவர் மீது ஊழல் புகார்கள் குவிந்து கொண்டிருந்த நேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய நபர்தான் யானை ராஜேந்திரன்.   இவர் சிஎஸ்.கர்ணனின் ஆதரவாளரும் கூட.
பொன்.மாணிக்கவேலும், யானை ராஜேந்திரனும் கரகாட்டக்கரன் படத்தில் வரும் செந்தில் கோவை சரளா போல.  இவரு ஊதறதும், அவரு ஆடறதும் பிரமாதமா இருக்கும்.   பக்கத்தில் ஒத்து ஊதுவது போல இருப்பதுதான் சென்னை உயர்நீதிமன்றம்.  இவர்கள் சேர்ந்திசையை கேட்டு அதற்கு ஏற்றார்ப்போல உத்தரவு போடும்.
சமீப காலமாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஆதரவாக அனைத்து வழக்குகளையும் தாக்கல் செய்வது யானை ராஜேந்திரன்தான்.
சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேல் இல்லாமல், எந்த அதிகாரியாக இருந்தாலும் விசாரித்திருப்பார்.  இக்கட்டுரையில் கூறியது போல, இது வரையிலும் விசாரணைகள் நடந்தே வந்திருக்கின்றன.   இந்த நபர் இல்லாவிட்டால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை மூடி விடுவார்களா என்ன ?
அரசு இயந்திரம் என்பது, ஆயிரம் பொன்.மாணிக்கவேல்கள் இருந்தாலும், இறந்தாலும் இயங்கும்.  அதுதான் அரசு.
நீதிமன்றங்கள்
நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்தை உணர்ந்து நடக்க வேண்டும்.  அரசியல் சட்டம் அவர்கள் அதிகாரங்களை எத்தனை தெளிவாக வரையறுத்திருக்கிறது என்பதை, சட்டம் அறிந்த நீதிபதிகளுக்கு நான் விளக்க வேண்டியதில்லை.
ஒரு அதிகாரி ஓய்வு பெறுகிறார்.  அவருக்கு பதில் வேறு அதிகாரியை நியமித்து விட்டோம் என்று அரசு தெரிவித்தால், ஓய்வு பெறும் அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமிக்க இந்த நீதிமன்றத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?  அந்த அதிகாரி இறக்கும் வரை பணி நீட்டிப்பு கொடுப்பார்களா ? இல்லை இந்தியாவிலிருந்து காணாமல் போன அத்தனை சிலைகளும் கண்டுபிடிக்கப்படும் வரை, அந்த அதிகாரிக்கு உயிரூட்டுவார்களா ?

நீதிபதி மகாதேவன்
தனது தீர்ப்பில் நீதிபதி மகாதேவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Mr.A.G.Pon Manickavel, I.P.S, Inspector General of Police is hereby appointed as a Special Officer to head Idol Wing-CID, Chennai to deal with the cases of theft of idols and antiques in all stages, for a period of one year, who shall assume charge on his superannuation on 30.11.2018 forthwith and function from the same camp with the same facilities. The Government shall pass orders to that effect. It is made clear that any delay by the Government in passing appropriate orders, shall not curtail the powers of Mr.A.G.Pon Manickavel, I.P.S. to head the team and investigate the cases and take appropriate action as per law.
Mr.A.G.Pon Manickavel, I.P.S., Inspector General of Police, shall draw the same pay and benefits that were available to him at the time of his retirement for the entire tenure of his term as Special officer.
The Special Officer, hereby appointed shall investigate the cases thoroughly and periodically submit all the reports before the appropriate Court as per law and also before this Court in a sealed cover to enable this Court to monitor the investigation.
The Special Officer and his team shall continue to not only investigate and file charge Sheets and prosecute in the pending cases but shall also continue to do so in the cases arising in future during his tenure or until further orders from this Court.
நீதிபதி மகாதேவன் அவர்களே.  நீங்கள் சட்டம் படித்தவர்கள்.  உங்களைப் போல நான் சட்டம் படித்தவன் அல்ல.  ஆனால், இதை படிக்கும்போதே சிரிப்பு வருகிறது.   சர்வீஸ் லா என்று ஒரு பிரிவு இருக்கிறது தெரியுமா ?  அதை படியுங்கள்.  அது தொடர்பான தீர்ப்புகளை படியுங்கள்.    நீதிமன்றங்களுக்குக் கூட, ஒரு அரசு ஊழியருக்கு பணி நீட்டிப்பு வழங்க அதிகாரம் கிடையாது.   நீதிபதி மகாதேவன் மற்றும் ஆதிகேசவலுவுக்கு, சர்வீஸ் லா தான் தெரியவில்லை என்றால், கிரிமினல் லாவும் தெரியவில்லை.
ஒரு தனி நபரை, காவல் துறை அதிகாரியாக்கி, அவருக்கு புலனாய்வு செய்யும் அதிகாரத்தை அளிக்க முடியும் என்றால் Criminal Procedure Code என்று அழைக்கப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் எதற்கு.
அச்சட்டத்தை Justice Mahadevan & Audhikesavalu Procedure Code என்று மாற்றி விடலாமே……
நீதிபதிகளே, சிலைகளை கண்டுபிடிப்பதும் ஒரு பணிதான். மறுக்கவில்லை.  உங்களிடம் நீதி தேடி வருபவர்களுக்கு முதலில் விரைவாக நீதியை வழங்குங்கள்.  நீதிமன்றங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாசல்களில் கண்ணீரோடு உள்ள ஏழைகளுக்கு நீதி வழங்குங்கள்.
கடவுள்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளட்டும்.