சனி, 8 ஜனவரி, 2011

ஒரு கால்ஷீட் – 8 மணி நேரத்துக்கு) நானூறு ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது

உறக்கமற்றவன்

”அத்தியாயம் 13
ஒரு சீரியல் ஐநூறு எபிசோடுகளைக் கடந்துவிட்டால் அதன் ஓட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அது தன்னாலே ஓடி பணத்தைக் கொட்டும் என்கிறார்கள் சின்னத்திரை ஏரியாவில்.
இந்தச் சீரியல்களில் வேலை செய்கிற உதவி இயக்குனர்களுக்குத் தினக்கூலியாக (அதாவது ஒரு கால்ஷீட் – 8 மணி நேரத்துக்கு) நானூறு ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவே ஒன்றரை கால்ஷீட் (12 மணி நேரம் – காலை 9 லிருந்து இரவு 9 வரை) என்றால் அறுநூறு ரூபாய் சம்பளம். மாதத்தில் இருபது நாள்கள் வேலை இருக்கும் என்பதுதான் இந்தத் தொழிலில் கிடைக்கிற உத்தரவாதம். மாதம் முழுக்க வேலை செய்கிற உதவி இயக்குனர்களும் இருக்கிறார்கள். தினசரி சம்பளத்தைக் கணக்கிடுகிற ஒரு சில கம்பெனிகள் இப்போது அதைவிடக் குறைவாக ஒரு சம்பளத்தை நிர்ணயித்து மாதச் சம்பளமாகக் கொடுத்துவிடுகிறார்களாம்.
அசோசியேட் டைரக்டர்களுக்குத் தினசரிச் சம்பளத்துடன் சேர்த்து தனி மாதச் சம்பளமும் வழங்கப்படும். தினந்தோறும் ஒரு கால்ஷீட்டுக்கு 750 ரூபாயும், ஒன்றரை கால்ஷீட்டுக்கு ஆயிரம் ரூபாயும் வாங்குகிறார்கள் இவர்கள். இந்த அசோசியேட் இயக்குனர்கள் படப்பிடிப்பில் கவனிக்கிற முக்கியமான வேலை பிராம்ப்ட்டிங். அதாவது நடிகர்களின் டயலாகை எங்காவது ஓரமாக நின்றுகொண்டு உரக்கச் சொல்லிக்கொடுப்பது. இவர்கள் சொல்லச் சொல்ல நடிகர் நடிகைகள் கிளிப்பிள்ளைபோலப் பேசுவார்கள். இங்கு ரீ-டேக் அதிகம் இல்லை என்பதால்தான் இப்படி ஒரு முறை. பின்பு தனியாக டப்பிங் இருக்கும் இவர்களுக்கு.
வசனகர்த்தாவோடு தொடர்பில் இருக்கும் உதவி இயக்குனருக்குதான் வீடு வாசல் தெரியாத அளவுக்கு வேலை இருக்குமாம். பல நேரங்களில் வசனகர்த்தா வீட்டிலேயே பழியாகக் கிடந்து நள்ளிரவில் வசனங்களை வாங்கிக்கொண்டுபோய் ஒப்படைப்பதும் நடக்கும். இவர்கள்மட்டுமல்ல, படப்பிடிப்பில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் மறுநாளைக்குத் தேவையான பிராப்பர்டிகளைத் தயார் செய்துவிட்டு வீட்டுக்குப் போய்ப் படுக்கவே இரவு 12 ஆகிவிடும். இந்தச் சிரமத்தை குறைப்பதற்காகவே மறுநாள் காலையில் பத்து மணிக்குதான் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள்.
தினந்தோறும் சீரியல் ஒளிபரப்பப்படுவதால் தினமும் ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவேண்டும் இந்த உதவி இயக்குனர்கள். இதில் முன்கதைச் சுருக்கத்தையும் சொல்ல வேண்டும். மார்க்கெட்டிங் டீமுடன் கலந்து பேசி விளம்பரங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கவேண்டும் என்பதைக் கேட்டு அதற்கு ஏற்றதுபோல சீரியலின் நேரத்தைக் கூட்டியோ குறைத்தோ எடிட்டிங் செய்யவேண்டும்.
அதுகூடப் பரவாயில்லை. திடீரென்று மார்க்கெட்டிங் எக்சியூட்டிவ் ஃபோன் செய்து ”ஒரு விளம்பரத்தைச் சேர்க்கணும். அறுபது செகன்ட் எடிட் பண்ணிக் கொடுங்க” என்பார். ஆனால் அதற்குமுன்பே முக்கியமான ஒரு காட்சியில் நிறுத்தி சீரியலுக்குத் ’தொடரும்…’ போட்டிருப்பார் இயக்குனர். அந்த பெப் குறையாத அளவுக்கு எடிட் செய்து இந்த 60 வினாடி விளம்பரத்தை இணைக்கிற பொறுப்பும் இந்த உதவி இயக்குனருக்குதான்!
சின்னத்திரை, பெரிய திரை இவ்விரு பிரிவுகளில் பணியாற்றும் உதவி இயக்குனர்களில் யாருக்குப் பெரிய எதிர்காலம் என்றால், நிச்சயமாகப் பெரிய திரையாளருக்குதான். சின்னத்திரையில் பணியாற்றுகிறவர்கள் அன்றாடச் சம்பளம் வருகிறதே என்று வாழ்க்கையை தொலைப்பவர்கள். குடும்பம், வாழ்க்கை என்று எதையும் அனுபவிக்கமுடியாமல் திணறும் இவர்களால்தான் நாம் தினந்தோறும் குடும்பக் கதைகளைக் காணமுடிகிறது, முரண் சுவை!
ஓர் உதவி இயக்குனருக்குத் தீராத வயிற்றுவலி. தானாகச் சரியாகிவிடும் என்று பொறுத்திருந்தவர் வலியின் உச்சகட்டத்தில் மருத்துவரிடம் போனார். அவர் சில மாத்திரைகளை எழுதி, ”இதை ரெண்டு நாள் தொடர்ந்து சாப்பிடுங்க. சரியாகிவிடும்” என்றார்.
இரண்டு நாட்கள் கழிந்தது. ம்ஹும். மறுபடியும் டாக்டரிடம் ஓடோடி வந்தார் உதவி இயக்குனர். அவர் ஏதேதோ டெஸ்ட்களை எழுதிக் கொடுத்தார். எப்படியோ, யார் புண்ணியத்திலோ அந்த டெஸ்ட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு ரிசல்டுக்காக மறுபடியும் டாக்டரிடம் வந்தார் உதவி இயக்குனர். எல்லாவற்றையும் ஆராய்ந்த மருத்துவர், “தம்பி நீங்க என்ன தொழில் செய்யறீங்க?” என்றார்.
“சார் நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கேன்” என்றார் உதவி.
“என்ன தம்பி. இதை முன்னாடியே சொல்லக் கூடாதா? இந்தாங்க. இதுல நூறு ரூபா இருக்கு. போயி சரவணபவன்ல வயிறாரச் சாப்பிட்டுட்டு வாங்க. எல்லாம் சரியாயிரும்” என்றார் மருத்துவர்.
செரிக்கவே செரிக்காத எத்தனையோ நிஜங்களில் இதுவும் ஒன்று. நேற்று மட்டுமல்ல, இன்றும் தொடர்கிறது இந்த அவலம். படப்பிடிப்பு தினங்களில் மட்டும் வயிறார சாப்பிடும் இவர்கள் படப்பிடிப்பு இல்லாத காலங்களில் படுகிற பாடு பெரும் பாடு. உதவி இயக்குனராகச் சேர்வதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும் சிலருக்கு. ஊரிலிருந்து ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னைக்கு வந்திருப்பார்கள். முதலில் வேறு வேலை பார்க்கப் பிடிக்காமல் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சுற்றி வரும் இவர்களைப் பார்த்தவுடனே அறிந்து கொள்வது அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல. இப்படி வந்த நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்கள் காலம் தந்த படிப்பினையால் வீடு புரோக்கர்களாகவும், கல்யாண வீட்டில் பந்தி பரிமாறுகிறவர்களாகவும் மாறிவிட்டார்கள். இத்தனைக்கும் நடுவிலே சினிமா கனவுமட்டும் அவர்களை இன்னும் துரத்திவருவது பரிதாபமான உண்மை.

கருத்துகள் இல்லை: