ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஐந்தாவது தடவையாக இன்று மட்டக்களப்பில்

தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஐந்தாவது தடவையாக இன்று மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் கூடியது.
 தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்திற்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அக்கட்சி உத்தியோகபூர்வமான முறையில் பதிலளிக்காமை குறித்து இவ்வரங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றது என்பதை தெரிவிக்கின்றது.
இன்றைய கலந்துரையாடலில்

1. அர்த்தமுள்ள மீள்குடியேற்றம்

2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள்கட்டுமானம்

3. உயர் பாதுகாப்பு வலயங்கள், மீள் குடியேற்றங்கள்

4. மக்களின் வாழ்விடங்களில் அமைக்கப்பட்டுவரும் இராணுவக் குடியேற்றங்கள்

5. முழுமையான சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்துதல்

6. ஆயுதப் போராட்டத்தினால் உடமைகளை உறவுகளை அங்கங்களை இழந்த மக்களுக்கு நட்ட ஈடுகளை பெற்றுக்கொடுத்தல்

7. வடக்கு கிழக்கு உட்பட தமிழ் பேசும் பகுதிகளில் இனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தளர்த்துதல்

8. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை தளர்த்துதல்

9. மீள் குடியேற்றத்தை வெளிப்படையாகச் செய்வதுடன் அதற்கு மக்கள் பிரதிநிதிகள் சர்வதேச உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளல்

10. தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து கைது செய்யப்பட்டுள்ள போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன் அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

11. அடுத்துவரும் கூட்டங்களில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளை இணைப்பது குறித்து ஆராயப்படும் ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டன.

இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்  வி.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் ஈ.பி.டி.பி. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  தந்தை செல்வாவின் புதல்வரும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவருமான எஸ்.சி.சந்திரஹசன் ஈ.பி.ஆர்.எல்.எப். பிரதிநிதி இரா.துரைரத்தினம் மற்றும் புளொட் அமைப்பின் இ.இராகவன் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: