சனி, 8 ஜனவரி, 2011

அப்பனைப் போல் பிள்ளை; தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி

சர்வாதிகார வம்சம்

13. கிம் குடும்பம்
ஒரு குடும்பத்தில் அப்பாவைப் போலவே பிள்ளையும் வந்தால் அக்குடும்பத்தில் எல்லோருக்கும் கொண்டாட்டம். ஆனால் அதுவே சர்வாதிகாரி குடும்பத்தில் நடந்தால் நாட்டு மக்களுக்கெல்லாம் திண்டாட்டம் தான்.  அப்பனைப் போல் பிள்ளை; தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதெல்லாம்  கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கும்; நாட்டை ஆளும் அதிகார வம்சத்தில் நிகழும் போது மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வேறு நாடுகளுக்கு ஓட வேண்டியது தான். வரலாற்றில் பல நாடுகளில் இப்படி கொடுமைக்காரத் தந்தையும் பிள்ளைகளும் தம் நாட்டு மக்களை இம்சித்த சம்பவங்கள் நிறைய. ஆனால் இதே நிலை இன்று உலகில் மிச்சமிருக்கும் சொற்ப கம்யூனிச நாடுகளில் ஒன்றான வட கொரியாவில் நிலவுகிறது.  அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வட கொரியாவைப் பீடித்த சாபக்கேடாக விளங்கும் கிம் குடும்பமே இந்த வார வில்லன்(கள்).
கொரிய நாட்டின் முதல் சாபக்கேடே அது அமைந்துள்ள இடம் தான்.  ஒரு பக்கம் சீனா இன்னொரு பக்கம் ஜப்பான்.  இரு மத யானைகளுக்கு இடையே மாட்டிக் கொண்ட கோழிக் குஞ்சின் நிலை தான் கொரியாவுக்கும். . வரலாற்றில் கொரியா சுதந்திரமாக இருந்த காலத்தை விட இவ்விரு நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த காலம் தான் அதிகம் எனலாம்.  நேரடியான ஆக்கிரமிப்பு நடந்தது குறைவான காலமே என்றாலும்,  சீனா மற்றும் ஜப்பானைப் பகைத்துக் கொண்டு கொரியா சின்ன விஷயத்தைக் கூட செய்ய முடியாது என்பது தான் யதார்த்த நிலை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய காலனியப் பேரரசுகளுக்குப் போட்டியாகத் தனக்கும் காலனிகளைத் தேடிக் கொண்டிருந்த ஜப்பான் கொரியா மீது படையெடுத்து அதனைத் தன் காலனியாக்கிக் கொண்டது.  முந்தைய ஆக்கிரமிப்புகளைப் போல அல்லாமல் இது விரைவில் முடியவில்லை. மாறாக பல பத்தாண்டுகள் தொடர்ந்து நீடித்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பினாலும் உலகில் அப்போது வேகமாகப் பரவி வந்த புதிய அரசியல் கருத்துகளாலும்  கொரியாவின் பழைய அரச அமைப்புகளும் பாரம்பரிய ஆட்சி முறைகளும் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டன.  பாரம்பரிய கருத்தாக்கங்களின் இடத்தைத் தேசியவாதம், சமதர்மம், கம்யூனிசம் போன்ற புதிய சித்தாந்தங்கள் பிடித்துக் கொண்டன. ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கொரியாவில் தேசியவாத மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அமைப்புகள் போராடத் துவங்கின.
அப்படி உருவான எதிர்ப்பு இயக்கங்களில் தான் கிம் இல்-சங் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.  அப்போது கொரிய கம்யூனிசக் கட்சி அனைத்துலக கம்யூனிச கட்சிகளின் அமைப்பிலிருந்து (comintern) ”தள்ளி வைக்கப்”  பட்டிருந்தது. .  இதனால் அதில் சேராமல் சீன கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார் கிம். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொரியாவையும் தைவானையும் முழுங்கி ஏப்பம் விட்டிருந்த ஜப்பான் 1930களில் சீனா மீது படையெடுத்திருந்தது.  சீனாவின் மஞ்சூரியா பகுதியில் சீனாவின் பல கோஷ்டிப் படைகளுக்கும் ஜப்பானிய இராணுவத்துக்கும் கடும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படி ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்டு வந்த கம்யூனிச படைப்பிரிவு ஒன்றில் அரசியல் அதிகாரி ஆனார். அங்கிருந்து படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் பதவி உயர்வு பெற்றார். இதற்கு அவருடைய அரசியல் திறமையும் ஜப்பானுடனான போரில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அடிக்கடி மரணமடைந்ததும் துணையாக இருந்தன.  1940களில் எஞ்சியிருந்த ஒரு சில கொரிய கம்யூனிச படைத்தளபதிகளில் கிம்மும் ஒருவர்.  இக்காலகட்டத்தில் தான் கிம் சோவியத் யூனியனின் செஞ்சேனை அதிகாரிகளின் கண்ணில் பட்டார். அப்போது செஞ்சேனை  உலகெங்கும் இருந்த கம்யூனிச போராளிக் குழுக்களுக்குப் போர்ப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்து வந்தது.  செஞ்சேனையில் சேர்ந்து பயிற்சி பெற்ற கிம் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை சோவியத் யூனியனிலேயே தங்கி விட்டார்.
ஐரோப்பாவில் நாசி ஜெர்மனியை வீழ்த்திய பிறகு செஞ்சேனை கிழக்கு நோக்கித் திரும்பியது. ஜப்பானியப் பேரரசின் ஆசியப் பிரதேசங்களை 1945ல் தாக்கியது. ஏற்கனவே நான்கு ஆண்டுகள் போரில் அமெரிக்காவிடம் நன்றாக அடிவாங்கியிருந்த ஜப்பானியப் படைகள் சோவியத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கொரிய தீபகற்பத்தை விட்டு வெளியேறின.  கொரியாவில் தனக்கு ஆமாம் போடும் ஒரு புதிய அரசை உருவாக்க நினைத்த ஸ்டாலினுக்கு அதற்கு உகந்த ஒரு ஜால்ராத் தலைவர் தேவைப்பட்டது. . செஞ்சேனையில் கொஞ்சம் பிரபலமாகியிருந்த கிம்முக்கு அதிர்ஷ்டம் அடித்து அவரை புதிய வட கொரிய நாட்டின் அதிபாராக்கினார் ஸ்டாலின். (கொரியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் வசமாகவில்லை, தென்பகுதி அமெரிககாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.  கிம்முக்கு வழி செய்யும் வகையில் சோவியத் உளவுத்துறை கொரியாவில் செல்வாக்குடன் இருந்த உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்களையெல்லாம்  தீர்த்துக் கட்டியது.  அடுத்த ஐந்தாண்டுகளில் கிம் தனது நிலையைப் பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டார். சோவியத் யூனியனின் கையாளாக மட்டும் இருந்தால் என்றும் அவர்களது தயவை நாடியே இருக்க வேண்டும் என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். இதனால் தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கினார். நெடுங்காலமாக அந்நியர் ஆதிக்கத்தில் கஷ்டப்பட்டிருந்த வட கொரிய மக்களும்.. ஆகா நம்மில் ஒருவர் இப்படி சக்தி வாய்ந்த தலைவராக உருவாகிறாரே என்று சந்தோஷப்பட்டனர், கிம்முக்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தனர். .பாவம், சொந்த செலவில் சூனியம் வைக்கிறோம் என்று அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.
மகன் கிம்
1950க்குள் வட கொரியா மீதான கிம்மின் பிடி நன்றாக இறுகி விட்டது. தனக்கு எதிராக வளரக்கூடியவர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து ஒழித்துக் கட்டினார் கிம்.  அனைத்து அரசியல் கட்சிகளையும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்தார். 1948ல் அதிகாரப்பூர்வமாக இரு கொரிய நாடுகளும் உருவானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பனிப்போர் அரசியலின் காரணமாக, தென்கொரியாவை சோவியத் யூனியனும், வட கொரியாவை அமெரிக்காவும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் ஆதரவு பெற்ற கொரியா தான் ஒரே அதிகாரப்பூர்வ கொரியா என்று சொல்லி வந்தன.  இந்த சச்சரவைப் பயன்படுத்திக் கொண்டு தனது நிலையை இன்னும் பலப்படுத்தினார் கிம்.  கொரிய ஒருங்கிணைப்புக்காகப் பாடுபடுவது போல மக்களிடம் காட்டிக் கொண்டார். 1950ல் தென் கொரியாவைக் கைப்பற்றித் தன் நாட்டுடன் இணைப்பதற்காகக் கொரியப் போரை ஆரம்பித்து வைத்தார்.  இதுவரை சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிஸ்ட் சீனாவின் கைப்பாவையாக இருந்து வந்த கிம், திடீரென்று தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு நிலையைத் தலைகீழாக மாற்றியது. பனிப்போர் அரசியல் காரணமாக ஸ்டாலினும் மாவோவும் வட கொரியாவுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்க வேண்டியதானது.  போரின் ஆரம்பத்தில் வேகமாக முன்னேறிய கொரியப் படைகள் தென்கொரியா முழுவதையும் கிட்டத்தட்ட கைப்பற்றி விட்டன. ஆனால் அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் படை அவற்றை விரட்டியடித்து வட கொரியா மீது படையெடுத்தன.  கம்யூனிசத்தின் மானத்தைக் காப்பாற்ற சீனா நேரடியாக போரில் ஈடுபட வேண்டியதானது.  மூன்று வருடங்கள் கடும் சண்டைக்குப் பின்னர் போர் நிறுத்தம் கையெழுத்தானது.  கிம் போரை ஆரம்பிப்பதற்கு முன் என்ன நிலை இருந்ததோ அதே நிலைக்கு எல்லைகள் திரும்பின. கிம்மின் பேரரசு ஆசை லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்தது தான் மிச்சம். மேலும் இரு கொரிய நாடுகளும் நாசமாகிப் போயிருந்தன.
போரினால் ஏற்படுத்திய நாசம் பத்தாதென்று, நிர்வாகத்தால் நாட்டினை சீர் குலைக்கும் முயற்சியில் இறங்கினார் கிம்.  இந்த காலகட்டத்தில் வட கொரியாவில் ஒரு பெரும் தனி மனித துதி இயக்கம் தொடங்கியிருந்தது. அரசு எந்திரமே கிம்முக்கான ஒரு ஜால்ரா எந்திரமாக மாறியிருந்தது. அவரது பெயரைப் பயன்படுத்தாமல் அனைவரும் அவரைப் “பெருந் தலைவர்”  (Great Leader”) என்றே அழைக்கவேண்டும் என்பது எழுதப் படாத விதியானது.  கிம் தான் நாட்டிற்குச் சந்திரகுப்தர், சாணக்கியர் எல்லாமே. அரசியல், பொருளாதாரம், இராணுவம் என்று எல்லா விஷயங்களிலும் கிம்மே முடிவெடுத்தார்.  அவருக்குத் தான் ஒரு பெரிய தத்துவ ஞானியென்ற நினைப்பு வேறு இருந்தது. எப்படி ஸ்டாலினசமும் மாவோவிசமும் உருவானதா அது போலவே தானும் ஒரு கொள்கையை உருவாக்க முயன்றார். ஜூச்சே (Juche) என்ற அந்த கொள்கை அடுத்த முப்பது ஆண்டுகளில் வட கொரியாவை முழுவதும் நாசபடுத்தி விட்டது.  கொஞ்சம் கம்யூனிசம், கொஞ்சம் கொரிய தேசிய வாதம், நிறைய தனி மனித துதி ஆகியவற்றின் அரைவேக்காட்டுக் கலவை தான் ஜூச்சே.   எந்த நாட்டை நம்பியும் வட கொரியா இருக்கக் கூடாதென்று நாட்டைத் தனிமைப்படுத்தினார் கிம்.  எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு என்பது தான் ஜூச்சேவின் அதிகாரப்பூர்வ இலக்கு. ஆனால் நடந்து என்னமோ தலைகீழ்.  அனைத்து நாடுகளிடமிருந்து வர்த்தக உறவுகளைத் துண்டித்துக் கொண்டதால் பொருளாதாரம் நாசமானது.  சரியான உள்கட்டமைப்பு வசதிகளும் திட்டமிடுதலுமில்லாத அரைகுறை கம்யூனிசத்தைப் பின்பற்றியதால் உள்நாட்டு உற்பத்தியும் காலியானது. முப்பது ஆண்டுகள் தொடர்ந்து தென்கொரிய உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து அரசியல் செய்து வந்ததால் இராணுவத்துக்குச் செய்யும் செலவு மீதமிருந்த பொருளாதாரத்தையும்  குலைத்து விட்டது.
எந்த நாட்டு தயவுமில்லாமல் வட கொரியா வாழும் என்று கிம் பிரசாரம் செய்து வந்தாலும்,  சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் தயவில்லாமல் ஒரு வருடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாத நிலை உருவானது. இடையில் சோவியத்-சீன மோதல்களில் கிம் சீனாவுக்கு ஆதரவளித்தார். அதற்குப் பின்னர் சீனா வடகொரியாவைக் கிட்டத்தட்ட தத்து எடுத்துக் கொண்டது.  ஏறக்குறைய திவாலாகிப் போயிருந்த வடகொரியாவை இருபது ஆண்டுகளுக்குச் சீனாவின் நிதி மற்றும் உணவு நிவாரணங்களே தூக்கி நிறுத்தின. நாடு நாசமாகிக் கொண்டிருந்த போது கிம் மட்டும் சொகுசாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்.  மக்களுக்கு சாப்பிட சோறு இருக்கிறதோ இல்லையோ “பெருந்தலைவருக்கு” நாடெங்கும் பிரமாண்ட சிலைகளும், நினைவு மண்டபங்களும் மட்டும் தவறாமல் கட்டப்பட்டன.  வட கொரிய குழந்தைகள் கல்வி கற்றார்களோ இல்லையோ பெருந்தலைவருக்குத் துதி பாட கற்றுக் கொண்டார்கள்.  வட கொரியா அழிவை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த போது தென் கொரியா அமெரிக்க உதவியுடன் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. வடகொரியா சீனாவிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க  தென்கொரியா ஆசியாவில் ஒரு பெரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்து விட்டது. இரு நாடுகளுக்கும் இடையே விழுந்த இந்த இடைவெளி கிம்மின் தென் கொரியப் படையெடுப்பு கனவைத் தகர்த்து விட்டது.
1990களில் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு வட கொரியாவின் நிலை இன்னும் மோசமானது. பொருளாதாரம் என்பதே மருந்தளவுக்குக் கூட இல்லை என்றானது.  தவறான உற்பத்திக் கொள்கைகளால் விவசாயம் நொடித்துப் போய் நாட்டில் பஞ்சம் உருவானது. சீனா தானம் கொடுக்கும் அரிசியை வைத்து மக்கள் உயிர் பிழைத்து வந்தனர்.  1994ல் கிம் தன்னுடைய 82வது வயதில் மாரடைப்பால் இறந்தார். ஆனால் அதற்கு முன்னரே அவர் தனது மகன் கிம் ஜோங்-இல் ஐ தனக்கு வாரிசாகத் தயார் படுத்தியிருந்தார். இரண்டாவது கிம் தந்தை விட்ட இடத்திலிருந்து வட கொரியாவைப் பாழாக்கும் வேலையைத் தொடங்கினார்.  மக்களுக்குச் சோறு கூட போட முடியாத நிலையில் ராணுவத்தை மட்டும் நல்ல பலமாக வைத்துக் கொண்டார். அணு ஆயுதங்களையும் உருவாக்கத் தொடங்கினார். பஞ்சத்தினால் ஒரு புறம் நாட்டு மக்கள் பட்டினி கிடக்க,  இன்னொரு புறம் தந்தையைப் போலவே மகனும் ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார்.  தனது தந்தைக்கும் நாடெங்கும் சிலைகளை நிறுவினார்.  தந்தையைப் போலவே தனக்கும் ஒரு தனி மனித துதி இயக்கத்தை நிறுவிக்கொண்டார். அப்பா கிம் பெருந்தலைவர் என்றால் மகன் கிம் “அன்பான தலைவர்” (dear leader).  வட கொரியாவுக்கு பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வந்த சீனாவும் ஆப்பசைத்த குரங்கு போல மாட்டிக் கொண்டது.  ஆதரவை நிறுத்தி விட்டால் வட கொரியா சீர் குலைந்து விடும், பின்னர் வட கொரிய மக்கள் அனைவரும் சீனாவுக்கு அகதிகளாக ஓடி வந்து விடுவார்கள்.  இப்போது செய்யும் செலவை விட இன்னும் பல மடங்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் வேறு வழியின்றி வட கொரியாவுக்கு ஆதரவளித்து இரண்டாவது கிம்மின் ஆட்சியைத் தூக்கி நிறுத்தி வருகிறது.
சீனாவின் கதி இப்படியென்றால்,  வட கொரியாவின் எதிரிகளான தென் கொரியாவும், அமெரிக்காவும் இன்னும் பரிதாபமான நிலையில் இருக்கின்றன. வட கொரியாவிடம் சில அணுகுண்டுகளும் அவற்றை நெடுந்தூரம் வீசக் கூடிய ஏவுகணைகளும் உள்ளதே காரணம். வட கொரியாவை அடிக்கவும் முடியாமல் சேர்ந்து வாழவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.  இப்போது இரண்டாம் கிம்முக்கு உடம்பு சரியில்லை என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர் தனக்கு வாரிசாக தனது மகன் கிம் ஜோங் உன் ஐ நியமித்திருக்கிறார். வட கொரியாவுக்கும் உலகுக்கும் கிம் குடும்பத்திலிருந்து விமோசனம் கிடைப்பது போலத் தெரியவில்லை.

ஒரு கால்ஷீட் – 8 மணி நேரத்துக்கு) நானூறு ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது

உறக்கமற்றவன்

”அத்தியாயம் 13
ஒரு சீரியல் ஐநூறு எபிசோடுகளைக் கடந்துவிட்டால் அதன் ஓட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அது தன்னாலே ஓடி பணத்தைக் கொட்டும் என்கிறார்கள் சின்னத்திரை ஏரியாவில்.
இந்தச் சீரியல்களில் வேலை செய்கிற உதவி இயக்குனர்களுக்குத் தினக்கூலியாக (அதாவது ஒரு கால்ஷீட் – 8 மணி நேரத்துக்கு) நானூறு ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவே ஒன்றரை கால்ஷீட் (12 மணி நேரம் – காலை 9 லிருந்து இரவு 9 வரை) என்றால் அறுநூறு ரூபாய் சம்பளம். மாதத்தில் இருபது நாள்கள் வேலை இருக்கும் என்பதுதான் இந்தத் தொழிலில் கிடைக்கிற உத்தரவாதம். மாதம் முழுக்க வேலை செய்கிற உதவி இயக்குனர்களும் இருக்கிறார்கள். தினசரி சம்பளத்தைக் கணக்கிடுகிற ஒரு சில கம்பெனிகள் இப்போது அதைவிடக் குறைவாக ஒரு சம்பளத்தை நிர்ணயித்து மாதச் சம்பளமாகக் கொடுத்துவிடுகிறார்களாம்.
அசோசியேட் டைரக்டர்களுக்குத் தினசரிச் சம்பளத்துடன் சேர்த்து தனி மாதச் சம்பளமும் வழங்கப்படும். தினந்தோறும் ஒரு கால்ஷீட்டுக்கு 750 ரூபாயும், ஒன்றரை கால்ஷீட்டுக்கு ஆயிரம் ரூபாயும் வாங்குகிறார்கள் இவர்கள். இந்த அசோசியேட் இயக்குனர்கள் படப்பிடிப்பில் கவனிக்கிற முக்கியமான வேலை பிராம்ப்ட்டிங். அதாவது நடிகர்களின் டயலாகை எங்காவது ஓரமாக நின்றுகொண்டு உரக்கச் சொல்லிக்கொடுப்பது. இவர்கள் சொல்லச் சொல்ல நடிகர் நடிகைகள் கிளிப்பிள்ளைபோலப் பேசுவார்கள். இங்கு ரீ-டேக் அதிகம் இல்லை என்பதால்தான் இப்படி ஒரு முறை. பின்பு தனியாக டப்பிங் இருக்கும் இவர்களுக்கு.
வசனகர்த்தாவோடு தொடர்பில் இருக்கும் உதவி இயக்குனருக்குதான் வீடு வாசல் தெரியாத அளவுக்கு வேலை இருக்குமாம். பல நேரங்களில் வசனகர்த்தா வீட்டிலேயே பழியாகக் கிடந்து நள்ளிரவில் வசனங்களை வாங்கிக்கொண்டுபோய் ஒப்படைப்பதும் நடக்கும். இவர்கள்மட்டுமல்ல, படப்பிடிப்பில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் மறுநாளைக்குத் தேவையான பிராப்பர்டிகளைத் தயார் செய்துவிட்டு வீட்டுக்குப் போய்ப் படுக்கவே இரவு 12 ஆகிவிடும். இந்தச் சிரமத்தை குறைப்பதற்காகவே மறுநாள் காலையில் பத்து மணிக்குதான் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள்.
தினந்தோறும் சீரியல் ஒளிபரப்பப்படுவதால் தினமும் ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவேண்டும் இந்த உதவி இயக்குனர்கள். இதில் முன்கதைச் சுருக்கத்தையும் சொல்ல வேண்டும். மார்க்கெட்டிங் டீமுடன் கலந்து பேசி விளம்பரங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கவேண்டும் என்பதைக் கேட்டு அதற்கு ஏற்றதுபோல சீரியலின் நேரத்தைக் கூட்டியோ குறைத்தோ எடிட்டிங் செய்யவேண்டும்.
அதுகூடப் பரவாயில்லை. திடீரென்று மார்க்கெட்டிங் எக்சியூட்டிவ் ஃபோன் செய்து ”ஒரு விளம்பரத்தைச் சேர்க்கணும். அறுபது செகன்ட் எடிட் பண்ணிக் கொடுங்க” என்பார். ஆனால் அதற்குமுன்பே முக்கியமான ஒரு காட்சியில் நிறுத்தி சீரியலுக்குத் ’தொடரும்…’ போட்டிருப்பார் இயக்குனர். அந்த பெப் குறையாத அளவுக்கு எடிட் செய்து இந்த 60 வினாடி விளம்பரத்தை இணைக்கிற பொறுப்பும் இந்த உதவி இயக்குனருக்குதான்!
சின்னத்திரை, பெரிய திரை இவ்விரு பிரிவுகளில் பணியாற்றும் உதவி இயக்குனர்களில் யாருக்குப் பெரிய எதிர்காலம் என்றால், நிச்சயமாகப் பெரிய திரையாளருக்குதான். சின்னத்திரையில் பணியாற்றுகிறவர்கள் அன்றாடச் சம்பளம் வருகிறதே என்று வாழ்க்கையை தொலைப்பவர்கள். குடும்பம், வாழ்க்கை என்று எதையும் அனுபவிக்கமுடியாமல் திணறும் இவர்களால்தான் நாம் தினந்தோறும் குடும்பக் கதைகளைக் காணமுடிகிறது, முரண் சுவை!
ஓர் உதவி இயக்குனருக்குத் தீராத வயிற்றுவலி. தானாகச் சரியாகிவிடும் என்று பொறுத்திருந்தவர் வலியின் உச்சகட்டத்தில் மருத்துவரிடம் போனார். அவர் சில மாத்திரைகளை எழுதி, ”இதை ரெண்டு நாள் தொடர்ந்து சாப்பிடுங்க. சரியாகிவிடும்” என்றார்.
இரண்டு நாட்கள் கழிந்தது. ம்ஹும். மறுபடியும் டாக்டரிடம் ஓடோடி வந்தார் உதவி இயக்குனர். அவர் ஏதேதோ டெஸ்ட்களை எழுதிக் கொடுத்தார். எப்படியோ, யார் புண்ணியத்திலோ அந்த டெஸ்ட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு ரிசல்டுக்காக மறுபடியும் டாக்டரிடம் வந்தார் உதவி இயக்குனர். எல்லாவற்றையும் ஆராய்ந்த மருத்துவர், “தம்பி நீங்க என்ன தொழில் செய்யறீங்க?” என்றார்.
“சார் நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கேன்” என்றார் உதவி.
“என்ன தம்பி. இதை முன்னாடியே சொல்லக் கூடாதா? இந்தாங்க. இதுல நூறு ரூபா இருக்கு. போயி சரவணபவன்ல வயிறாரச் சாப்பிட்டுட்டு வாங்க. எல்லாம் சரியாயிரும்” என்றார் மருத்துவர்.
செரிக்கவே செரிக்காத எத்தனையோ நிஜங்களில் இதுவும் ஒன்று. நேற்று மட்டுமல்ல, இன்றும் தொடர்கிறது இந்த அவலம். படப்பிடிப்பு தினங்களில் மட்டும் வயிறார சாப்பிடும் இவர்கள் படப்பிடிப்பு இல்லாத காலங்களில் படுகிற பாடு பெரும் பாடு. உதவி இயக்குனராகச் சேர்வதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும் சிலருக்கு. ஊரிலிருந்து ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னைக்கு வந்திருப்பார்கள். முதலில் வேறு வேலை பார்க்கப் பிடிக்காமல் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சுற்றி வரும் இவர்களைப் பார்த்தவுடனே அறிந்து கொள்வது அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல. இப்படி வந்த நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்கள் காலம் தந்த படிப்பினையால் வீடு புரோக்கர்களாகவும், கல்யாண வீட்டில் பந்தி பரிமாறுகிறவர்களாகவும் மாறிவிட்டார்கள். இத்தனைக்கும் நடுவிலே சினிமா கனவுமட்டும் அவர்களை இன்னும் துரத்திவருவது பரிதாபமான உண்மை.