செங்கல்பட்டில் சினிமா எடுக்க ஆசைப்படும் ராஜ்கிரண்கள் ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் ஊருக்கு ஊர் குறும்படங்கள் மூலமாய் சினிமாவின் கதவை நெட்டித் திறக்கலாம் என்கிற நம்பிக்கையில் வேலையை விட்டு, குறும்படம் எடுத்துத்தள்ளும் கூட்டம் பெருகிவிட்டது. முன்பு கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதைப் போல, தற்போது குறும்பட வெளியீடு நடந்து கொண்டிருக்கிறது.
ஊரும் உறவும் நண்பர்களும் கூடி, குறும்பட வெளியீட்டுவிழாவுக்குப் பெருந்தொகை செலவழித்தபின், அதை யூடியூபில் போட்டு நண்பர்கள் வட்டம் மூலமாய் பகிர்ந்து ஒரு பத்தாயிரம் ஹிட்ஸ் தேத்திவிட்டால், அடுத்தக் குறும்பட முயற்சிக்கு போக வேண்டியதுதான். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது குறும்பட உலகம். ஆனால் செலவழித்த தொகையையாவது திரும்ப எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதே இல்லை.