மாலை நேர ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் பார்ப்பவர்களைப் பொறுத்த வரை என்.டி.டி.வியும், சி.என்.என்-ஐ.பி.என்னும், டைம்ஸ் நவ்வும்தான் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்றன என்று தோன்றும். ‘நாட்டின் தலைவிதியை தம் கைவசம் வைத்திருக்கும்’ இந்தத் தொலைக்காட்சிகளின் தலைவிதிகளை கைவசம் வைத்திருப்பது யார் என்பதை, சி.என்.என்.-ஐ.பி.என் குறித்து காரவன் மேகசினில் வெளியாகியிருக்கும் ராகுல் பாட்டியாவின் கட்டுரை விளக்குகிறது.
2007 சிஎன்பிசி-டிவி 18 நிகழ்ச்சியில் ராகவ் பாலும் முகேஷ் அம்பானியும்.
2012-ம் ஆண்டு ஜனவரி மாதம், சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியை நடத்தும் டி.வி-18 நிறுவனம் ஈநாடு தொலைக்காட்சியில் (ETV) ரிலையன்சின் பங்குகளை ரூ 2,100 கோடி கொடுத்து வாங்கப் போவதாக அறிவித்தது. ஆந்திராவின் ராமோஜி ராவ் குழுமத்துக்கு சொந்தமான ஈநாடு நிறுவனத்தின் வசம் ஏழு மாநிலங்களில் 12 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. மேலோட்டமாக பார்த்தால் ஊடகத் துறையில் ரிலையன்சுக்கு இருந்த ஆதிக்கம் டி.வி-18 கையில் வருவது போலத் தோன்றும்.