திங்கள், 18 செப்டம்பர், 2017

பெரியாரின் கொள்கையில் நடைமுறை மாற்றங்களை கொண்டுவந்தவர் அண்ணா: சுப.வீ.

சுப.வீரபாண்டியன்.சி.என்.அண்ணாதுரைதமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக நீடிக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் என்று அங்கீகரிக்கப்படும் தலைவர் மறைந்த முதல்வர் சி.என்.அண்ணாதுரை. அதிமுக என்னும் கட்சியின் பெயரிலும், கொடியிலும் அவரே இருக்கிறார்.
தற்போது உடல் நலமில்லாமல் ஓய்வில் இருக்கும் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதி அவரை அடிக்கடி குறிப்பிட்டுப் பேசக்கூடியவர்.
அவரது பிறந்த நாளை ஒட்டி, அண்ணாவின் அரசியல் பாரம்பரியம் என்பது எதைக் குறிப்பது என்பது குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் பிபிசி தமிழிடம் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
“அண்ணாவின் அரசியல் என்பது மொழி உரிமை, சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகியவற்றை வலியுறுத்தியது”.
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கம் தொலைநோக்குப் பார்வையோடு அண்ணாவால் முன்வைக்கப்பட்டது. அண்ணா 1969ல் இறந்துவிட்டாலும், அந்தக் கோரிக்கை இன்னமும் வலிமையாக நிற்கிறது. முன்னெப்போதையும்விட அதற்கு இப்போது தேவை அதிகமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அந்தச் சிந்தனை தற்போது வந்திருக்கிறது” என்கிறார் சுப.வீரபாண்டியன்.
இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழி என்று வந்தபோது அது விவாதத்துக்குள்ளாகி இந்தியும், ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சி மொழி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றது.
ஆட்சிமொழி
அப்போத நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா, எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 14 மொழிகளும் (தற்போது இந்த அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன) ஆட்சி மொழியாக வேண்டும். அது நடக்கும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னிறுத்தவில்லை. இந்திக்கு மாற்றாகவே ஆங்கிலத்தை முன்னிறுத்தினார் என்றார்.
ஒருவனே தேவன்…
பெரியாரின் கடவுள் மறுப்பை மாற்றி திமுக-வின் நிலைப்பாடாக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அறிவித்தார் அண்ணா. அது பெரியாரின் நிலைப்பாட்டை நீர்த்துப் போகச் செய்தது என்ற விமர்சனத்தைச் சுட்டிக் காட்டியபோது, “பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக உள்ள சமூகத்தில் அவர்களது நம்பிக்கைக்கு மாறாகப் பேசி தேர்தல் அரசியல் நடத்துவது கடினம்.

எனவே பெரியாரைப் போலல்லாமல் இணக்கமாகப் போகவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. எனவே திருமூலரிடம் இருந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வரியை எடுத்துக்கொண்டார்.
எனவே முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பதையும், கடவுள் இல்லவே இல்லை என்பதற்கும் இடையில் கடவுள் ஒன்று என்று சொன்னார். ஒன்று என்பது பூஜ்ஜியத்துக்குதான் நெருக்கமானது. முப்பத்து முக்கோடிக்கு நெருக்கமானதல்ல. மேலும், அந்த முழக்கத்தில் சாதியை மறுக்கும் ‘ஒன்றே குலம்’ என்பதே முக்கியமான பகுதி”, என்றார்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர்
முதல்வராக அண்ணா இரண்டாண்டு காலம் ஆட்சியில் இருந்தார். அந்தக் குறுகிய காலத்தில் அவர் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். கல்வியில் இருமொழிக் கொள்கையைக் கொண்டுவந்தார். 

சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்.
திருமணத்தில் பெண்ணை கன்னிகாதானம் என்று சொல்லி, பொருளாகப் பாவித்து தானம் செய்யும் வழக்கம் இருக்கிறது. இதற்கு மாற்றாக பெரியார் சொல்லி வந்த சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத்தந்தது முக்கியமானது.
மேடைப் பேச்சில் தமக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டவர் அண்ணா. தமிழ்நாட்டு அரசியலில் மேடைப் பேச்சு பாணியில் அண்ணாவின் செல்வாக்கு இன்றுவரை உண்டு என்றார்.
கீழ் வெண்மணி
தஞ்சையை அடுத்த கீழ் வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு கொளுத்தப்பட்டது அவரது ஆட்சிக் காலத்தில்தான் நடந்தது. அதற்கு அவர் உரிய முறையில் எதிர்வினையாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, “1968 டிசம்பர் இறுதியில் அந்த நிகழ்வு நடந்தது. அடுத்த நாளே அமைச்சர்களை அங்கே அனுப்பிவைத்து உரிய நடவடிக்கைகளை அண்ணா எடுத்தார்.
ஆனால், அச் சம்பவம் நடந்து ஒரு மாதமே அண்ணா உயிரோடு இருந்தார். அதிலும் ஜனவரி முழுவதும் உடல் நலமில்லாமல் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தார். பிப்ரவரி தொடக்கத்திலேயே இறந்துவிட்டார்.
அப்படி இருக்கும்போது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தலித் மக்கள் மீதான அக்கறையில் வருவதில்லை. அண்ணா மீது குற்றம் சுமத்தவேண்டும் என்பதற்காக சொல்லப்படுவது”, என்றார் சுப.வீரபாண்டியன்.
bbc

கருத்துகள் இல்லை: