திங்கள், 18 செப்டம்பர், 2017

சேப்பாக்கம் மைதானத்தில் கறுப்பு சட்டைக்கு தடை

மின்னம்பலம்  : இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள்
போட்டி நடைபெற்றுவரும் சேப்பாக்கம் மைதானத்திற்குக் கருப்பு சட்டை அணிந்து சென்றவர்கள் தடுத்த நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் நீண்ட வரிசையில் இருந்து டிக்கெட்டுகளை வாங்கினர். இன்று செப்.17 நடைபெற்றுவரும் போட்டியை காண்பதற்காகத் திரளான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.

இந்நிலையில் கருப்பு சட்டை, டி. சர்ட் அணிந்து சென்ற ரசிகர்களுக்கு மைதானத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பேனா, பேனர் போன்ற பொருட்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கருப்பு சட்டை அணிந்து சென்றிருந்த ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள கடைகளில் வேறு நிற டி.சர்ட்களை வாங்கி அணிந்துகொண்டு ரசிகர்கள் உள்ளே சென்றனர்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மெரினாவில் போராட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மைதானத்தில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருப்பு சட்டை அணிந்தவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் கருப்பு சட்டைக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடை ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: