புதன், 10 நவம்பர், 2010

நம்ம ஊரு கவுன்சிலர்களின் மனைவிமார்களே கைகுலுக்க கவுரவம் பார்க்கும்போது, அமெரிக்க அதிபர் மனைவி



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய வருகை எதிர்ப்புகளையும் தாண்டி பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. நான்கு நாள் விஜயத்தின்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பையில் கழித்தார் ஒபாமா.

வர்த்தக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில் தொழிலதிபர்களுடன் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தினார். ஒபாமாவுடன் அவரது மனைவி மிஷேல் மற்றும் கு ழுவினர் நான்காயிரம் பேர் வந்திருந்தனர்.

ஒபாமாவின் வருகையால் தெற்கு மும்பை கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாதுகாப்பு கெடுபிடியால் திணறியது. இந்தப் பகுதி மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியாமல் தவித்தனர்.

மும்பை செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஒபாமா தம்பதியுடன் கலந்துரையாடும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. ஒபாமாவும், அவரது மனைவியும் எவ்வித பந்தாவும் இல்லாமல் சகஜமாகப் பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

முதலில் பேசிய மிஷேல், ‘பதில் அளிக்க முடியாதபடி தன் கணவரிடம் கடினமான கேள்விகளைக் கேளுங்கள்’ என்று மாணவர்களுக்கு அன்புக் கட்டளையிட, ஆடிப் போய்விட்டார் ஒபாமா. மனைவியின் கிண்டலை ரசித்த ஒபாமா, மனைவியைப் புகழ்ந்து தள்ளிவிட்டார்.

‘மிஷேல் சிறந்த பேச்சாளர். அவருக்குப் பின்னால் நான் பேசினால் என் பேச்சு எடுபடாது. எனவே, கடினமான கேள்விகளைக் கேட்டு விடாதீர்கள்’ என்று மாண வர்களிடம் கெஞ்சாத குறையாக கேட்டார் ஒபாமா.

ஒபாமாவும், அவரது மனைவி மிஷேலும் அடித்த நகைச்சுவையால் அரங்கமே அதிர, மாணவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள்.

அதன்பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுடன் நடனம் ஆடிய மிஷேல் எவ்வித பந்தாவும் இல்லாமல், அந்த குழந்தைகளாகவே மாறிப்போனார்.



ஒபாமாவுடன் தொழில் அதிபர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானிடம் ரேஷன்கார்டு, பான்கார்டு ஆகிவற்றை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கேட்க, டென்ஷன் ஆனார் அவர். ஓபாமாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வெளியேறிய அவரை அதிகாரிகள் சமரசப்படுத்த முயன்றனர். ஒபாமாவை வரவேற்க ஏககெடுபிடி செய்யப்பட்ட போதும், அசோக் சவான் ‘அப்செட்’ ஆகி அங்கிருந்து கிளம்பி தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். முதல்வருக்குப் பதிலாக துணை முதல்வர் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல முறை பாதுகாப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்து மக்களேடு கைகுலுக்க ஆர்வம் காட்டினார் ஒபாமாவின் மனைவி மிஷேல்.

நம்ம ஊரு கவுன்சிலர்களின் மனைவிமார்களே கைகுலுக்க கவுரவம் பார்க்கும்போது, அமெரிக்க அதிபர் மனைவி அனைவரையும் அரவணைத்ததுதான் மும்பை பத் திரிகைகளில் தலைப்புச் செய்தி.

கருத்துகள் இல்லை: