ஞாயிறு, 26 நவம்பர், 2017

ஆர் கே நகர் தேர்தலில் தினகரனுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை .. பெறுவதற்கு ,,, இருக்கிறது?

Savukku : ஆர்கே நகருக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.  முதல் நாள் எடப்பாடி அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி சூடு தணிவதற்குள், மறு நாள் இடைத் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.   தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளை பல அரசியல் கட்சிகள் சந்தேகத்திற்குள்ளாக்கி கேள்வி எழுப்பியுள்ளன.
மத்திய புலனாய்வுத் துறை, வருவாய் புலனாய்வுத் துறை, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, நேரடி வருவாய்த் துறை, போன்ற மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளை, அரசியல் நோக்கங்களுக்காக பல முறை மத்தியில் ஆண்ட ஆளும் காங்கிரஸ் அரசு பயன்படுத்தியுள்ளது.  நாங்கள் மாறுபட்ட கட்சி என்ற முழக்கத்தோடு பதவியேற்ற பிஜேபி, நாங்கள் காங்கிரஸை விட இந்தக் கலையில் வல்லவர்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.   ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற முழக்கத்தோடு 1998ல் வாஜ்பாய் அரசு பதவியேற்றது.  ஆனால் பிஜேபி கட்சியின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமண், ராணுவ தளவாட கான்ட்ராக்ட் பெற்றுத் தருகிறேன் என்று கையும் களவுமாக லஞ்சம் வாங்கியதை டெகல்கா (அப்போது இணையதளம்) அம்பலப்படுத்தியது.

அதையடுத்து, டெகல்கா இணையதளத்தில் முதலீடு செய்திருந்தவர்களை அமலாக்கத் துறை வருமான வரித் துறை சோதனைகள் என்ற பெயரில், வாட்டி வதைத்து, டெகல்கா நிறுவனத்தை ஏறக்குறைய முடக்கியது.  டெகல்கா நிருபர் ஒருவர் மான் தோல் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், சிபிஐயால் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையிலிருந்தார்.
இது போன்ற தாக்குதல்கள் எதற்கும் ஆளாகாமல் இருந்த ஒரே அமைப்பு தேர்தல் ஆணையம். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது அவரின் தலைமைச் செயலாளராக அச்சல் குமார் ஜோதி இருந்தார்.  இவரை 2015ம் ஆண்டு தேர்தல் ஆணையராக்கி, பின்னர் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்தபோதே, பல சந்தேகங்கள் எழுந்தன.    ஆனால், குஜராத் மாநில தேர்தல் தேதியை தாமதமாக அறிவித்ததில் இருந்தே ஜோதியின் நேர்மைத் தன்மை வெளிப்படையாக தெரிந்தது.

தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி
ஒரே நேரத்தில் நடக்கும் மாநில தேர்தல்களுக்கான தேதியை ஒன்றாக வெளியிடுவதே இது நாள் வரை வழக்கமாக இருந்து வந்தது.  தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பாண்டிச் சேரி போன்ற நான்கு மாநில தேர்தல்களும் ஒரே நாளிலேயே வெளியிடப்பட்டன.   ஆனால் இமாச்சல பிரதேச மாநிலத்துக்கான தேர்தலை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஜோதி, குஜராத் தேர்தலுக்கான தேதிகளை இரண்டு வாரங்கள் கழித்து வெளியிட்டார்.  குஜராத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெறுவதை தாமதத்துக்கான காரணமாக கூறினார் ஜோதி.  ஆனால் குஜராத் மாநில அதிகாரிகள், வெள்ள நிவாரணப் பணிகள் பல வாரங்களுக்கு முன்பாகவே முடிந்து விட்டதாக தெரிவித்தனர்.  தேர்தல் தேதி தாமதப்பட்ட அந்த இரண்டு வாரங்களில் மோடி குஜராத் சென்று, படகு போக்குவரத்தை தொடங்கி வைத்ததோடு, புதிய பாலக் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா வரை கலந்து கொண்டார். மோடியின் இந்த நிகழ்ச்சிகளையும், தேர்தல் தேதி அறிவிப்பு தாமதத்தையும் நிச்சயமாக பிரித்துப் பார்க்க முடியாது.
இந்தப் பின்னணியில்தான், இந்திய தேர்தல் ஆணையம் முதல் நாள் இரட்டை இலை ஒதுக்கி, மறுநாள் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதை பார்க்க முடியும்.  இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் கட்சியும் இல்லாமல் சின்னமும் இல்லாமல் டிடிவி தினகரன் களமிறங்குகிறார்.  நடைபெற உள்ள தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதுதான் பரவலான கருத்தாக உள்ளது.   அது சரியாக இருக்கும் என்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, பதவியை இழந்து பின்னர் கர்நாடக உயர்நீதின்றம் அவரை விடுதலை செய்த பிறகு ஆர்கே நகரில்தான் 2015ம் ஆண்டு போட்டியிட்டார்.  அப்போது ஜெயலலிதா அந்தத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 1,60,432. அந்தத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்தபடியாக இருந்த சிபிஐ வேட்பாளர் மகேந்திரனை விட ஜெயலலிதா ஒன்றரை லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில் மீண்டும் வந்த பொதுத் தேர்தலில் ஜெயலலிதா 97,218 வாக்குகளை மட்டுமே பெற்றார்.   அவருக்கும் திமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் வெறும் 39,545.
ஜெயலலிதா போட்டியிட்டபோதே வெறும் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவரால் வெல்ல முடிந்தது. ஜெயலலிதா இருந்தபோதே அவரது செல்வாக்கு மிகப் பெரும் சரிவை சந்தித்திருந்தது.  தற்போது அதிமுக சந்திக்கும் இந்தத் தேர்தல் ஜெயலலிதா இல்லாத தேர்தல்.   மேலும், கடந்த ஒரு ஆண்டாக, ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் எடப்பாடி அரசாங்கத்தை மக்கள் எந்த அளவு முழுமையாக நேசிக்கிறார்கள் என்பதை நாம் வெளிப்படையாக காண முடிகிறது.
திமுகவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது.   இந்த நிலையில் உண்மையான போட்டி, இரண்டாவது இடம் யாருக்கு என்பதே.
ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சசிகலா மீதும் மன்னார்குடி குடும்பத்தின் மீதும் மக்களிடையே எழுந்த வெறுப்பு என்பது அளவிட முடியாத ஒன்று.  முதல்வராக சசிகலா முயற்சிக்கிறார் என்ற செய்தி, தமிழகம் முழுக்க மிகக் கடுமையான வெறுப்பு அலையை உருவாக்கியது.   அதன் பின்னர் அறிவிக்கப்பட்ட இடைத்  தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட சசிகலாவின் படத்தை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல்தான் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அத்தகைய வெறுப்புணர்வை மழுங்கச் செய்து, ஒரு விதமான ஏற்பு உணர்வை டிடிவி தினகரன் இன்று பெற்றுள்ளளார் என்பது எளிதான காரியம் அல்ல.   சமூக வலைத்தளங்களில் டிடிவி குறித்து வெளியிடப்படும் கருத்துக்களில் இதை தெளிவாக பார்க்க முடிகிறது.  சாதாரண பொது மக்களிடம் பேசுகையிலும், “அருமையா பேசறார்.   எல்லா கேள்விக்கும் நிதானமா பதில் சொல்றார்” என்ற கருத்தை காண முடிகிறது.   ஆனால் இது ஆர்கே நகரில் டிடிவிக்கு வாக்குகளை பெற்றுத் தருமா என்பதுதான் கேள்வி.
இது குறித்து பேசிய அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன், “டிடிவி தினகரன், இது நாள் வரை, அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்.  இந்த தேர்தல் அந்த பிம்பம் உடைந்து போகும் சூழலை உருவாக்கும்.  வெற்றி வாய்ப்பு உறுதியாக இல்லை என்று தெரிந்த நிலையில், அவர் போட்டியிடுவது சரியான முடிவாக எனக்குப் படவில்லை.   அவரால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை உறுதியாக தடுக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால், ஒரு வேளை ஆளும் அதிமுகவை விட குறைவான வாக்குகளை அவர் பெற்றாரேயானால், தற்போது அவரோடு உள்ள அவரது ஆதரவாளர்கள் அவரை விட்டு விலகிப் போகும் அபாயம் உள்ளது.  அதன் பின்னர் அவர் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும்” என்றார்.
ஆனால் டிடிவி தினகரன் போட்டியிடா விட்டாலும் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான். போட்டியைக் கண்டு அஞ்சி ஓடுபவராகவும்,  நெருக்கடியை எதிர்கொள்ள முடியாதவர் என்றும் அடையாளம் காணப்படுவார். ஆர்கே நகரில் டிடிவி தினகரனால் திமுகவை வெல்ல முடியாது என்றாலும், அதிமுக தொண்டர்களையும், கட்சியையையும் வசப்படுத்த, இந்தத் தேர்தலில் அவர் தன் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
கடந்த முறை டிடிவி தினகரன் போட்டியிட்டபோது, ஆட்சியும், அதிகாரமும் அவர் உடன் இருந்தன.   தினகரனுக்காக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஆர்கே நகரில்  பிரச்சாரம் செய்தார்கள்.    அவர்களிடம் இருந்த பண பலமும், அதிகார பலமும், அரசு நிர்வாகத்தின் பலமும், ஆர்கே நகரின் இண்டு இடுக்குகளிலெல்லாம் அவர்களுக்கு வெளிச்சத்தை தந்தது.   ஒரு வாக்குக்கு நான்காயிரம் ரூபாய் கொடுக்கும் அளவுக்கு பணம் தண்ணீராக ஓடியது.
ஆனால் இவை எதுவுமே இல்லாமல் டிடிவி தினகரன் இன்று களம் இறங்குகிறார்.  மாநிலத்தில் ஆளும் அதிமுக மற்றும் மத்தியில் ஆளும் பிஜேபி என்ற பலம் வாய்ந்த இரு பெரும் சக்திகளோடு நேரடி மோதலில் டிடிவி இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.   கட்சியும் இல்லை. இரட்டை இலை சின்னமும் இல்லை.   ஏறக்குறைய தனி நபராகத்தான் டிடிவி களத்தில் இறங்குகிறார்.
இரட்டை இலை சின்னம் மட்டுமே ஒரு கட்சிக்கு வெற்றியைத் தேடித் தராது என்பது உண்மையே.  வெறும் சின்னம் வெற்றியைத் தேடித் தரும் என்றால், 1996 தேர்தலில், பர்கூரில் ஜெயலலிதாவே இரட்டை இலை  சின்னத்தில் தோற்றிருக்க மாட்டார்.    ஜெயலலிதாவை பர்கூரில் தோற்கடித்த வேட்பாளர் சுகவனத்தை பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்திய திமுக தலைவர் கருணாநிதி, சுகவனத்தை “யானையின் காதில் புகுந்து வந்த எறும்பு” என்றார்.       2004 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் படு தோல்வியை சந்தித்தது.    சின்னம் ஒரு பலம் என்றாலும் சின்னம் மட்டுமே வெற்றியை தேடித் தந்து விடாது.
இந்தக் கட்டுரை பதிப்பிக்கப்படும் வரை, ஆர்கே நகருக்கான அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.   ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் இந்தத் தேர்தலில் போட்டியிட்டே ஆக ‘வேண்டும் என்று கடும் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.   அவர்களது அணியைச் சேர்ந்த கேபி.முனுசாமி தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.    ஆனால் எடப்பாடி அணியைச் சேர்ந்த மீன்வளத் துறை அமைச்சர்  ஜெயக்குமார், பன்னீர் அணிக்கு இந்த தொகுதிக்கான சீட் ஒதுக்கப்படக் கூடாது என்று தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மறுபுறம் பிஜேபி இந்தத் தேர்தலில் போட்டியிடுமா இல்லையா என்பதையே இது வரை அறிவிக்கவில்லை.  இது தொடர்பாக பிஜேபியில் நடந்த முதல் கட்ட கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.   இந்தத் தொகுதியில் பிஜேபி தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுகவை போட்டியிடாமல் தடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. ஏனென்றால், பிஜேபி அதிமுகவோடு இணைந்த தனது செல்வாக்கை சோதித்துப் பார்ப்பதற்கான அற்புதமான களம் ஆர்கே நகர்.   இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல், தனியாக போட்டியிட்டு 10 ஆயிரம் வாக்குகளை பெற்று தன்னை அம்பலப்படுத்திக் கொள்ள பிஜேபி விரும்புமா என்பது சந்தேகமே.
அப்படி தனியாக பிஜேபி போட்டியிட்டால் கூட, டிடிவி தினகரனைப் பொறுத்தவரை, அதிமுக மற்றும் பிஜேபி இருவருமே அவருக்கு எதிரிகள்தான்.    பிஜேபி எதிர்ப்பு அரசியலுக்கான வலுவான களத்தில் தமிழகத்தில் இன்னும் காலியிடம் இருக்கிறது.    புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி, மன்னார்குடி சொத்துக்களுக்கு பிஜேபி சேதம் விளைவிக்காது என்ற நம்பக்கையிலேயே டிடிவி தினகரன், குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஜேபி கேட்காமலேயே அவர்களுக்கு ஆதரவு அளித்தார்.     ஆனால், நம்ப வைத்து கழுத்தறுக்கும் கட்சி பிஜேபி என்பதை தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் வருமான வரி சோதனைகள் நடைபெற்ற பிறகே தினகரன் புரிந்து கொண்டார்.
வருமான வரி சோதனைகளுக்குப் பிறகுதான் முதல் முறையாக டிடிவி வாயைத் திறந்து, பிஜேபியை நேரடியாக விமர்சனம் செய்தார். அவரை டெல்லி காவல்துறை இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்த பிறகும் கூட பிஜேபி மீது நேரடி தாக்குதலை தொடுக்க அவர் தயங்கியே இருந்தார்.
டிடிவி தினகரன் பெயரில் நிறுவனங்கள் இல்லாமல் இருக்கலாம்.   டிடிவி தினகரன் பெயரில் புதிய சொத்துக்கள் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால், அவரை சுற்றியுள்ள உறவினர்கள், நூற்றுக்கணக்கான கோடி சொத்துக்களை ஜெயலலிதாவின் பினாமிகளாக இருந்து வாங்கிக் குவித்துள்ளார்கள் என்பது தினகரனுக்கு நன்றாகவே தெரியும்.    தந்தி டிவி பேட்டியில், விவேக் ஜெயராமன்  வெறும் தலைமை நிர்வாக அதிகாரிதான் அவர் அந்த சொத்துக்கு உரிமையாளர் அல்ல என்று ஆவேசத்தோடு பேசிய தினகரன், யார் அந்த சொத்துக்கு உரிமையாளர் என்பதையும் சொல்லியிருக்க வேண்டும்தானே ?   ஜாஸ் சினிமாசுக்கு விவேக் சிஇஓ மட்டுமே என்பது சரி.  யார்தான் அதன் உரிமையாளர் ?   எத்தனை கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கப்பட்டன ?   முதலீடு செய்தது யார் ?  அந்த முதலீடு எங்கிருந்து வந்து என்பதை, டிடிவி தினகரனும் சொல்லவில்லை.   விவேக் ஜெயராமனை வளரும் அம்பானி என்று பேட்டியெடுத்து இந்து நாளேட்டில் கட்டுரை எழுதிய சந்தியாக்களும் சொல்லவில்லை.
இந்த மன்னார்குடி குடும்பத்தின் சொத்துக்கள் என்ற சுமை, டிடிவி தினகரன் முதுகில் தொடர்ந்து சவாரி செய்து கொண்டேதான் இருக்கும்.   ஒரு கட்டத்தில் அவரை பின்னால் இழுக்கவும் செய்யும்.    திருட்டுச் சொத்துக்கு சிஇஓ ஆன விவேக் ஜெயராமன் நான் அரசியலில் இறங்கினாலும் இறங்குவேன் என்று அவருடைய பிஆர்ஓக்களால் கட்டுரை எழுத வைத்து வெளியிட்டது, குடும்பத்திற்கு உள்ளேயே இருந்து தினகரனுக்கு வைக்கப்பட்ட வெளிப்படையான சவால்.    துரை முருகனின் பேட்டியை ஒளிபரப்பாதீர்கள் என்று தெளிவாக கூறிய பிறகும், ஜெயா டிவியில் துரை முருகனின் பேட்டியை ஒளிபரப்ப உத்தரவிட்டதும், விவேக் ஜெயராமன் தினகரனுக்கு நேரடியாக விடுத்த சவால்.
திமுக மற்றும் அதிமுக இல்லாமல், டிடிவி தினகரனுக்கு அவருடைய பேராசை பிடித்த பெரிய குடும்பத்தை சமாளிக்க வேண்டிய சிக்கலும் இருக்கிறது.
இத்தகைய சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி, டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதில்தான் அவருடைய அசல் திறமை அடங்கியிருக்கிறது.
அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் என்னோடுதான் இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் சொல்வது உண்மையென்றால், அது ஆர்கே நகர் களத்தில் அது பிரதிபலிக்க வேண்டும்.
டிடிவி ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில் “இந்தத் தேர்தல் துரோகிகளை அடையாளம் காட்டுவதற்கான தேர்தல்.  துரோகிகளை அம்பலப்படுத்துவதே எங்கள் நோக்கம்”  என்றார்.
சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரை பொறுத்தவரை,   எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் கடைந்தெடுத்த துரோகிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.   ஆனால் இவர்களுக்கு செய்த இந்த துரோகம், ஆர்கே நகர் வாக்காளர்களை எப்படி பாதிக்கும், அவர்களிடையே இந்த துரோகம் குறித்த பிரச்சாரம் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழக அரசியல் போக்குகளை   உன்னிப்பாக கவனித்து வரும் டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில் “டிடிவி தினகரனை அரசியலில் இருந்து முழுமையாக ஓரங்கட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பிஜேபி எடுத்து வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.   ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரை தேடிச் சென்று பழிவாங்கும் நடவடிக்கைகளை பிரதமர் மோடியே முன்னின்று நடத்துகிறார் என்பதை நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.   எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி ஒரு வலுவான சக்தியாக உருவாக வேண்டும் என்ற பிஜேபியின் பதைபதைப்பு பிஜேபின் நடவடிக்கைகளில் தெரிகிறது.   ஆனால் இந்த முயற்சிகளின் விளைவாக, டிடிவி தினகரன் ஒரு ஹீரோவாக உருவாகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த மாபெரும் வருமான வரி சோதனைகள், சசிகலா குடும்பத்தை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் முயற்சிகளே.   அந்த முயற்சிகளும் ஆர்கே நகர் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்றது யாருக்கும் வியப்பை ஏற்படுத்தவில்லை.  ஆனால் 1800 அதிகாரிகளை அனுப்பி ஒரு மாபெரும் சோதனையை நடத்தி முடித்த பிறகும், வருமான வரி அதிகாரிகளால், தினகரனுக்கு எதிராக எந்தவொரு ஆதாரத்தையும் கண்டுபிடிக்க   முடியவில்லை.   அப்படி ஏதாவதொரு ஆதாரம் சிக்கியிருந்தால், அதை இந்நேரம் வெளியிட்டு, டிடிவி தினகரனின் இமேஜை சிதைத்திருப்பார்கள்.
சசிகலாவும் அவர் குடும்பத்தினரும் மக்களால் வெறுக்கப்படுகிறார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், டிடிவி தினகரனைப் பற்றிய மக்களின் அபிப்ராயம் மாறிக் கொண்டே வருகிறது.   மேலும், பிஜேபி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்துக்கு எதிராக அவர் செய்து வரும் அரசியல், மக்களிடையே அவர் செல்வாக்கை உயரச் செய்துள்ளது. டிடிவி தினகரனுக்கு எதிராக பிப்ரவரி 2017ல் நிலவிய கோபம் இப்போது இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.    இது மட்டுமே டிடிவி தினகரனின் பலம்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை, டிடிவி தினகரனுக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை.   ஆனால் பெறுவதற்கு ஏராளமாக இருக்கிறது.   தன்னை நிரூபித்துக் கொள்வதற்கு அவருக்கு இதுதான் கடைசி வாய்ப்பு.    அனைவரின் கவனமும் ஆர்கே நகரின் மீதும், டிடிவி தினகரனின் மீதும்தான் இருக்கிறது.    மன்னார்குடி குடும்பம், ஆர்கே நகர் தேர்தலை எளிதாக எடுத்துக் கொண்டு, ஒப்புக்கு போட்டியிடுவார்களே ஆனால், எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஏறக்குறைய வெற்றி பெற்று விட்டார்கள் என்றே அர்த்தம்.    நேரடியாக களத்தில் இறங்கி தன் முழுமையான பலத்தை பயன்படுத்தி மோதுவதைத் தவிர தினகரனுக்கு வேறு வழியே இல்லை.
இப்போது கட்சி என்ற அமைப்பு கிடையாது, காவல்துறை கிடையாது, ஆர்கே நகர் அதிமுக தொண்டர்கள் கிடையாது. இவை அனைத்துமே எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் பக்கம் உள்ளன.
மிக மிக கவனமாக திட்டமிட்டு, ஆர்கே நகர் தேர்தலை சாதுர்யமாக எதிர்கொள்வது ஒன்றே டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்றார் அந்த பத்திரிக்கையாளர்.
இடைத் தேர்தல்களுக்கான ஒரு சிறந்த உதாரணம், 2010ம் ஆண்டு நடந்த பென்னாகரம் தேர்தல்.  அந்தத் தொகுதியின் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் காலமானதையொட்டி, நடைபெற்ற தேர்தல் அது.   தொடர் தோல்விகளை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதன் செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டிய நெருக்கடி.  அப்போது பாமகவில் இருந்த வேல்முருகன், பம்பரமாக சுழன்று வேலை செய்தார்.   திருமங்கலம் ஃபார்முலாவை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய திமுக, பணத்தை வாரியிறைத்தது.    அதிமுகவும் சளைக்காமல் பணம் கொடுத்தது.   ஆனால், அந்தத் தேர்தலில், அதிமுகவை டெப்பாசிட் இழக்க வைத்து இரண்டாமிடத்தை பிடித்தது பாமக.    மூன்றாம் இடத்தை பிடித்த அதிமுகவுக்கும் பாமகவுக்கும் மட்டும் 14 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசம்.
அது போன்றதொரு உத்வேகத்தோடு டிடிவி தினகரன் ஆர்கே நகர் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.   அது மட்டுமே நாளை அவர் அரசியலில் இருப்பாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.

கருத்துகள் இல்லை: