திங்கள், 22 ஆகஸ்ட், 2011

புத்தளம் நகர் இராணுவக் கட்டுப்பாட்டில்- நகரில் சுமுக நிலை!




புத்தளத்தில் நேற்று இரவு பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் இடம்பெற்ற முறுகல் நிலையை தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளி வாசலில் பள்ளி, சமய, அரசியல் மற்றும் சமூகத் தலைமைகள் இணைந்து இரவு எடுத்த தீர்மானத்துக்கமைய புத்தளம் பூரண இராணுவக்கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதுடன் இன்று புத்தளம் நகரில் இயல்புவாழ்க்கை திரும்பியுள்ளது. மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் இயல்பாக ஈடுபட்டுள்ளனர்.

புத்தளம் மணல் குண்று பிரதேசத்தில் இன்று பிற்பகல் 8 மணியளவில் ஏற்பட்ட கிரீஸ் மனிதன் பதட்டத்தினை தொடர்ந்து, கிரீஸ் மனிதனை விரட்டிச்சென்ற பிரதேச மக்களுக்கும் அவ்விடத்தில் காணப்பட்ட பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் குடும்பப்பெண் ஒருவர் உட்பட மேலும் நான்கு இளைஜர்கள் காயமுற்று புத்தளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள் புத்தளம் நகரை நோக்கி வந்ததுடன் பொலிஸார் ஒருவரை கடுமையாக தாக்கினர். இதனால் புத்தளம் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான மோதல் உக்கிரமடைந்தது தொடர்ந்து பொலிசாரும் கடற்படையினரும் இணைந்து நகருக்குள் நுழைந்து வீதிகளில் நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் தராவிஹ் தொழுகையை முடித்து விட்டு வீடுகளுக்கு சென்று கொண்டிருந்த பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடாத்தினர்.
நிலைமை மேலும் மோசமடைவதை கட்டுப்படுத்துவதட்காக, புத்தளம் பெரிய பள்ளிவாசளினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் அமைதி காக்குமாறும் அனைவரும் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதட்கு பள்ளிவாசலுக்கு வருகை தருமாறும் அழைப்புவிடுக்கப்பட்டது.

பள்ளிவாசலில் புத்தளம் பெரிய பள்ளி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், புத்தளம் ஜம்மியத்துல் உலமா உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் நகர பிதா உட்பட அரசியல் மற்றும் சமூகப் பெரியார்கள் கலந்து கொண்டதுடன், ஆத்திரமுற்றிருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தி ஆறுதல்கள் கூறியதுடன் மேலும் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினர். இவ்வேளை பெரிய பள்ளிவாசலின் அழைப்பிற்கு இணங்க உடனடியாக விஜயம் செய்த வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரிகேட் கொமாண்டர் திரு கமெகே அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பெறப்பட்ட முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டன.

இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் முகாம்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன், நகரத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதுடன் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவங்களினால் பொலிஸ் அலுவலர் ஒருவர் உயிர் இழந்ததுடன் காயமுற்ற பொது மக்கள் நான்கு பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: