புதன், 24 ஆகஸ்ட், 2011

யாழ் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள் கட்டளைத் தளபதி சந்தேகம்

யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினருக்கும், பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து நாவாந்துறை மற்றும் பாசையூர் பிரதேசத்தில் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய 100 பேரும் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்தார்.
பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராகச் செயற்பட்ட இவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் யாழ். நகரிலுள்ள மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெற்றது.
இதில் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் சட்டத்தைக் கையிலெடுக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்ட இவர்கள், அமைதிச் சூழலைக் குழப்பும் வகையில் மக்கள் நடந்துகொள்ளக் கூடாதென்றும் தெரிவித்தனர்.
பொதுமக்கள் சட்டத்தைக் கையிலெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். குடாநாட்டில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது இவற்றின் பின்னணியில் சில அரசியல் சக்திகள் செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இந்த விடயத்தில் ஊடகங்களு க்கும் பாரிய பங்குண்டு. போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை மேலும் குழப்பமடையச் செய்யாமல் அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஊடகவியலா ளர்களுக்கும் உண்டு என்று அவர் குறிப்பிட்டார். மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கும், யாழ். குடாநாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தென்படுகிறது.
திட்டமிட்ட ஒரு தரப்பினர் ஏதோவொரு திட்டத்தைக் கொண்டே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். மக்களுக்கு நாம் வீடுகளைக் கட்டித் தருகின்றோம், வைத்தியசாலையில் உங்களுக்கு இரத்தம் தருகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் மீது தாக்குதல்களை நடத்துவது கவலையளிக்கிறது.
இவ்வாறான சம்பவங்களைக் கண்டிக்கும் சிலர் இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டுமெனக் கோருகின்றனர். இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டுமெனக் கோருவது நடைமுறைச் சாத்தியமற்றது. உயர்மட்டத்திலேயே இது குறித்த தீர்மானங்களை எடுக்க முடியும். என்றும் இராணுவக் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: