திங்கள், 23 அக்டோபர், 2017

கறுப்பு பணத்தை மாற்ற சினிமாதான் சிறந்த வழி: டைரக்டர் சேரன் புகார்

தினமலர் :வேறு தொழில்களில் கிடைத்த கறுப்பு பணத்தை மாற்றுவதற்கு சினிமா தொழிலை பயன்படுத்துவதாக கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் சினிமா இயக்குநர் சேரன் பேசினார். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரோட்டரி சங்கத்தின் சார்பில் தொழில் பயிற்சி குறித்த கருத்தரங்கம் நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய சினிமா இயக்குநர் சேரன் பேசுகையில், பார்க்கிற சினிமாவிற்கும், அதன் உருவாக்கத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சினிமா தற்போது விவசாயம் மாதிரியாகிவிட்டது.
முதலீடு திரும்ப கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. தற்போது சினிமா வெற்றி பெற மார்க்கெட்டிங் தான் முக்கியம், அதிலும் நேர்மையாக மார்க்கெட்டிங் மேற்கொள்கிறவர்களும் உள்ளனர். ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர். என் படம் நல்லா இருக்கு என டி.விக்களில் அமர்ந்து பேசுகின்றனர். அதனை நம்பி போனால் படம் திருப்தி இல்லாமல் உள்ளது.
மார்க்கெட்டிங் பண்ணி ஏமாற்றும் நிலை உள்ளது. படம் வெளியான அன்றே வெற்றிக்கான பார்ட்டி வைத்து ஏமாற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.
ஒரு தொழில் பண்ணும் போது முதல்ல எப்படி ஏமாற்றுவது என்பதனை கற்றுக்கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாத்துறை நன்றாக இருந்தது. சினிமாவை தியேட்டருக்கு போனால் தான் பார்க்க முடியும்,விவசாயம் விவசாயத்தினை பண்ணினால் தான் தெரியும், எல்லாமே அந்த தொழில் சார்ந்தவர்கள் அந்த அந்த தொழிலை செய்த போது நன்றாக இருந்தது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பணம் வைத்திருப்பவர்கள் பணத்தினை வைத்து கொண்டு எல்லா தொழிலுக்கும் வந்து விட்டனர். எல்லாவற்றையும், உண்மையில் தொழிலை நேசித்தவர்களை முடங்கி விட்டனர். சினிமாவில் கார்பரேட் நிறுவனங்கள் உள்ளே புகுந்து படம் பண்ண தெரியாவிட்டாலும் கோடிக்கணக்கில படத்தினை வாங்கி வெளியிடுகின்றனர். லாபம் வருதோ இல்லையோ மற்ற தொழில்களில் கிடைத்த கள்ளப் பணத்தினை சினிமாவில் வந்து புகுத்தி நல்ல பணமாக மாற்றிக்கொள்ளும் வழியை கண்டுபிடித்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஓவியா பல திரைப்படங்கள் நடித்தாலும் மக்களுக்கு தெரியவில்லை, ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு அவருடைய மார்கெட் உயர்ந்துள்ளது. ஒரு ஐடியா வேண்டும் என்றால் ஒரு ஓவியா தேவை. நான் தேசிய விருது வாங்கிய போது எந்த புத்தகமும் அட்டைபடத்தில் போடவில்லை,
ஆனால் விருதே வாங்காமல் துணியில்லாமல் இருந்தால் போட்டுவிடுவார்கள், ஒரு குடிமகனை பற்றி கவலைப்படாத அரசு, வரி மட்டும் எப்படி கேட்க முடியும், அதனால் தான் மக்கள் அரசை ஏமாற்ற தயாராக உள்ளனர். எனக்கு அரசின் கல்வி வேண்டும், ஆனால் தரமான கல்வி இல்லை, அதனால் நான் பணம் கட்டி தனியார் கல்விக்கு செல்கிறேன், தரமான மருத்துவத்தினை அரசு தரவேண்டும், தரவில்லை, எனவே தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை, சாலை, குடிநீர், எனது தொழில் சம்பாதித்த பணம் எல்லாவற்றும் வரி செலுத்துகிறோம் . ஆனால் அரசு மக்களிடம் கவனம் செலுத்தவில்லை என்றார்.
dinamalar

கருத்துகள் இல்லை: