வியாழன், 26 ஆகஸ்ட், 2010

திருப்பூர் கல்லூரி மாணவனை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் மீது புகார்

திருப்பூர் கல்லூரி மாணவன் இளையபாரதியை நிர்வாணப்படுத்தி சித்தரவதை செய்த கல்லூரி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது பெற்றோர் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தனர்.

சிறுமுகை, கூத்தப்பட்டியைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி என்பவரின் மகன் இளையபாரதி (18). இவர் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.

கடந்த 19-ம் தேதி கல்லூரியில் மாணவர் ஒருவரின் செல் போன் திருட்டு போனது. இது தொடர்பாக மாணவர் இளையபாரதி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இளையபாரதியின் செல் போன் பறிக்கப்பட்டது. தனி அறைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி பேராசிரியர், இளையபாரதியை நிர்வாணப்படுத்தி சோதனை செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவர் கடந்த 19-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் இளையபாரதியின் தந்தை குப்புசாமி, தாயார் சந்திரா மற்றும் உறவினர்கள் எஸ்.பி.கண்ணனை சந்தித்து இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி. இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை: