சனி, 28 ஆகஸ்ட், 2010

ரணில் ஆவேசம், ஹக்கீம் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எமக்கு செய்யப்பட்ட துரோகம்:


ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்தமையானது எமக்கு செய்யப்பட்ட துரோகம். நாம் அவர்களுக்கு அதிக இடங்களை தேர்தலின்போது வழங்கினோம் என ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவேசத்துடன் தெரிவித்தார்.
நாம் எமது தலைமையில் பொது எதிரணி ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மஹிந்தவினால் கொண்டுவரப்படவுள்ள அரசியல்யாப்பு சீர்திருத்தத்தினை ஒழுங்கமைக்கவும், வேண்டுமெனில் மாற்றம் கொண்டுவரவும் செயற்பட்டோம். ஆனால் ஹக்கீம் இதனை குழப்பிவிட்டார்.

நேற்று கட்சியின் அதிஉயர்பீடம் கூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்தமையானது எமக்கு செய்யப்பட்ட பச்சைத் துரோகம் எனத் தெரிவித்துள்ள ரணில்,
நாடாளுமன்றத்திற்கு பொறுப்புச் சொல்லக் கூடிய ஓர் நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் தலைமையிலான ஆட்சி முறைமையை உருவாக்குவதாக ஜனாதிபதி முதலில் உறுதியளித்த போதிலும், தற்போது அந்த உறுதிமொழி மஹிந்தவினால் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமக்கு வாக்களித்த மக்களை ரணில் விக்ரமசிங்க ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் எவ்வித நிபந்தனையுமின்றி ரணில் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை திசை திருப்பியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சியின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள மறைமுகமாக துணை போவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: