வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மாநகரசபை உறுப்பினர் கடத்தப்பட்டிருக்கலாம்,போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்

மர்மமான முறையில் காணமல் போயுள்ள தமது கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அவர், மூன்று தினங்களுக்குள் விடுதலை செய்யபடாத பட்சத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் வெகுஜன போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மத்திய செயற்குழு சார்பாக அக்கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜாவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கடந்த சனிக்கிழமை இரவு முதல் குறித்த உறுப்பினர் காணமல் போன சம்பவமானது சமாதானத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதுடன், மனிதாபிமானமற்ற ஜனநாயக விரோத செயலாகவும் இது அமைகின்றது.
அத்துடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் காணமல் போயுள்ள மாநகரசபை உறுப்பினரை கடத்தியவர்கள் உடனடியாக விடுதலை செய்து மட்டக்களப்பு மாநகரின் சுமூகமான சூழ்நிலையை பாதுகாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: