திங்கள், 6 பிப்ரவரி, 2017

சசிகலாவுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்யக்கூடாது ! சசிகலா புஷ்பா கோரிக்கை !


அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் தமிழக முதல்வராகவும் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பொது மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் சிலர் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “சசிகலா மீது இன்னும் சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழத்தின் மிகவும் முக்கியம் வாய்ந்த பொறுப்புக்கு சசிகலா வரலாமா? தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வரும் பட்சத்தில், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதும் தடைபடும். கட்சியிலும் நிர்வாக சிக்கல்கள் ஏற்படும்” என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கமாக சசிகலாவிற்கு கடுமையாக எதிர்வினையாற்றும் சசிகலா புஷ்பா, காட்டமான கருத்துகளை முன்வைத்து வருகிறார். சசிகலா சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கூறிய கருத்துகள் இதோ: “முதல்வர் பதவிக்கு சசிகலா நடராஜன் வருவதை தமிழக மக்களும் இளைஞர்களும் விரும்பவில்லை. சசிகலா நடராஜன் அவசரம் அவசரமாக பதவியேற்க பேராசைப்படுவது ஏன்? குற்றச் செயலுக்காக கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் சசிகலா. எந்தவிதமான அரசியல் பணிகளிலும் ஈடுபடாதவர், கட்சிக்காக எந்த போராட்டங்களிலும் ஈடுபடாதவர் சசிகலா. சசிகலாவிற்கு பதவி வழங்கப்பட்டதை கண்டு அதிமுக தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் சசிகலா முதல்வராக ஆசைப்படலாமா? தமிழக முதல்வர் பதவிக்கு தகுதியே இல்லாதவர் சசிகலா, அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது” என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: