புதன், 8 பிப்ரவரி, 2017

அணி மாறுவதை தடுக்க உச்சகட்ட கண்காணிப்பில் அதிமுக எம்.எல்.ஏக்கள்

சசிகலாவின் பதவியேற்பை ஆளுநர் தாமதப்படுத்துவதாகக்கூறி அதிமுக  எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஓபிஎஸ்சின் அதிரடி பேட்டியைத் தொடர்ந்து, இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 129 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சசிகலா, அதிமுகவுக்கு எதிராக சிலர் சதி செய்து வருவதாகவும், அவர்களுக்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில், சசிகலாவின் பதவியேற்பை ஆளுநர் தாமதப்படுத்துவதாகக்கூறி அதிமுக  எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் முடிந்த பின்னர் எம்.எல்.ஏக்கள் அனைவரும் இரண்டு பேருந்துகள் மூலம் அருகில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்களை சந்திக்க குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி இதுவரை நேரம் ஒதுக்காத காரணத்தால், அவரது அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் வரை எம்.எல்.ஏக்களை சுற்றுலா அழைத்துச் செல்ல சசி தரப்பு உத்தரவிட்டுள்ளதாம். மேலும் அவர்களின் செல்போன்களும் உச்சகட்ட கண்காணிப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது லைவ்டே

கருத்துகள் இல்லை: