ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

பொதுக்கணக்கு குழு தலைவர்.... திமுகவுக்கு விட்டு கொடுத்த காங்கிரஸ்


தமிழக சட்டப்பேரவையின் மரபுப்படி உடனடியாக 12 குழுக்கள் அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ‘சட்டப்பேரவை குழுக்கள் விரைவில் அறிவிக்கப்படும்’ என்று, அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி கூடிய சட்டபேரவையில், சட்டமன்றத்தின் 12 குழுக்களுக்கான தலைவர்கள், உறுப்பினர்களை நியமனம் செய்து சபாநாயகர் தனபால் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பில் சட்டமன்ற குழுக்களின் முக்கியக் குழுவான பொதுக்கணக்கு குழு தலைவராக காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
பொதுக்கணக்கு குழுவின் தலைமையை பிரதான எதிர்கட்சியான திமுகவிற்கு வழங்காததால் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்  “ஆட்சி செய்கிறவர்களின் முறைகேடுகள், ஊழல்களைக் கண்டுபிடித்து கண்காணிக்கக் கூடிய குழு பொதுக் கணக்கு குழுவாகும். எனவே, அந்த குழுத் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர், தலைவராக இருப்பது மரபு. இல்லாவிட்டால் அவர் பரிந்துரைப்பவரை நியமிப்பார்கள். ஜி.கே.மூப்பனார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தை பரிந்துரைத்தார். அதேபோல், தற்போது பொதுக்கணக்கு குழு தலைவராக என்னை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். நான் வருவதைக் கண்டு அவர்களுக்கு பயம். நான் வந்தால் இவர்கள் விட்ட டெண்டர், மணல் கொள்ளை என ஊழல்களை கண்டுபிடித்து தோலுரிப்பேன் என்பது அவர்களுக்குத் தெரியும். திமுக-வுக்கு அந்தப் பதவியை தராவிட்டால் நாங்கள் எந்தக் குழுவிலும் இருக்க மாட்டோம். எனவே, அனைத்துக்குழுவிலும் அதிமுக உறுப்பினர்களை அவர்களே நியமித்துக் கொள்ளட்டும் என்று துரைமுருகன் கூறினார்.
பொதுக்கணக்கு குழுவின் பொறுப்பை திமுகவிற்கு வழங்காமல் காங்கிரஸ் கட்சியினருக்கு வழங்கி இருப்பதன் மூலம் திமுக காங்கிரஸ் கூட்டணியிடையே விரிசல் ஏற்படுத்துவதற்காக அதிமுக தலைமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக திமுகவினர் கருதுகின்றனர்.
இந்நிலையில் தங்களது கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தும் அதிமுகவின் முயற்சியை அறிந்துகொண்ட திமுக தலைமை இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்பட்டு வருகிறது.
அதிமுகவினரின் முயற்சியை அறிந்துகொண்ட ஸ்டாலின், சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று முடிவெடுத்தார்.
ஆனால் எதற்கும் இந்த விஷயம் குறித்து முதலில் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என்று யோசித்த திமுக தரப்பினர் இதுகுறித்து திருநாவுக்கரசரிடம் பேச்சுவாரத்தை நடத்தினர். அப்போது, அதிமுகவின் திட்டத்தை தானும் நன்கு அறிவேன் எனவே இந்த விஷயத்தில் நாம் ஒன்றாக செயல்படுவோம் என்றும் இதுகுறித்து ராமசாமியிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து, பொதுக்கணக்கு குழு தலைவர் பொறுப்பு தங்களுக்கு வேண்டாம் என்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி சபாநாயகரிடம் தெரிவிக்க முடிவெடுத்துள்ளார் என்றும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
ஒருவேளை காங்கிரஸின் இந்த முடிவை சபாநாயகர் ஏற்காதபட்சத்தில் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: