திங்கள், 18 ஜூலை, 2011

வடபகுதி வியக்கத்தக்க வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றது - அமைச்சர் பசில் ராஜபக்ச

யாழ் மாவட்டத்தில் 11 இறங்கு துறைமுகங்களை மட்டுமல்ல 19 இறங்குதுறைகளை அமைத்து மீன்பிடித் தொழில்துறை மேம்படுத்தப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார்.

பருத்தித்துறை திக்கம்முனை மயிலானை பொது மைதானத்தில் இடம்பெற்ற வாழ்வாதார நலத்திட்டங்களுக்கான பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் இன்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் துறையை மென்மேலும் விரிவாக்கம் செய்வதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அவாவாக இருக்கின்றது. இந்நிலையில் ஏற்கனவே 11 இறங்கு துறைமுகங்களை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 19 இறங்குதுறைமுகங்கள் அமைத்துக் கொடுத்து அதன் மூலம் மேலும் இத்தொழில்துறை மேம்படுத்தப்படும்
இன்றைய தினம் 14 வீதிகளை புனரமைக்கும் பணிகளையும் நாம் தொடக்கி வைத்துள்ளதுடன் பல்வேறு அபிவிருத்தி பணிகளையும் தொடக்கி வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் இறுதியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுடன் பல்வேறு வாழ்வாதார நலத்திட்டங்களுக்கான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பிற்கிணங்க யாழ்ப்பாணத்திற்கு கடந்த 13ம் திகதி வருகை தந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்தி நலத்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்ததுடன் வாழ்வாதார உதவித் திட்டங்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிலையில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ச  அவர்கள் இன்று மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: