செவ்வாய், 19 ஜூலை, 2011

தமிழகத்தில் நுழைய நித்யானந்தாவுக்கு தடை

பெங்களூர் : தமிழகம் உட்பட சாட்சிகள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்று நித்யானந்தாவுக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சாமியார் நித்யானந்தா படுக்கை அறையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, அவர் பலாத்கார வழக்கில் கைதானார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

சில மாதங்களாக வெளியில் தலைகாட்டாத நித்தி, சமீபத்தில் திடீரென சென்னையில் ரஞ்சிதாவுடன் இணைந்து, பேட்டி அளித்தார். தானும், ரஞ்சிதாவும் உள்ள வீடியோ காட்சிகள் பொய்யானவை என்று  மீண்டும் சொன்னார். இதை கர்நாடக சிஐடி போலீசாரும், அரசு வக்கீலும் மறுத்து, இது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது; கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றனர். 

மேலும் , தமிழகம் உட்பட சில இடங்களுக்கு செல்வதன் மூலம் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கிறார்; அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீசார் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் பிடதி ஆசிரமத்தில், பக்தர்களை அந்தரத்தில் மிதக்க வைக்கிறேன் என்று கூறி, ரஞ்சிதா உட்பட பலரையும் குதிக்க வைத்தார். ஆனால், அவர்கள் என்ன தான் குதித்தும் அவரால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியவில்லை. இது பெரும் தோல்வி அடைந்தது பக்தர்கள் இடையே இவர் போலி சாமியார் என்பதை பறைசாற்றியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  ஜாமீன் தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி கேசவநாராயணன் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:  வழக்கில் சாட்சிகளை நித்யானந்தா கலைப்பார் என்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை. எனவே, போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். எனினும், அவர் சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ முயற்சிக்கக் கூடாது. சாட்சிகள் வசிக்கும் பகுதிகளுக்கே அவர் செல்லக் கூடாது. பிடதி போலீஸ் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் மாற்றமில்லை. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நித்யானந்தா மீது புகார் கொடுத்தவர்கள் பலரும் தமிழகத்தில் உள்ளதால், அவர் தமிழகத்திற்கு வரவும் தீர்ப்பின் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: