ஞாயிறு, 12 ஜூன், 2011

Infosys 1.3 லட்சம் ஊழியர்களுடன், 6 பில்லியன் டாலர் சொத்து.நாராயணமூர்த்தி

டெல்லி: இன்போசிஸ் நிறுவனம் பி1 விசா மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க கோர்ட் கூறியிருப்பது வருத்தம் தருவதாகவும், இந்தப் புகார் தனது மனதை பாதித்துள்ளதாகவும் இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.

பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனத்தின் 30வது வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு நாராயணமூர்த்தி பேசினார். இதுதான் அவர் இன்போசிஸ் தலைவராக கலந்து கொள்ளும் கடைசிக் கூட்டம் என்பதால் அவரது பேச்சு உருக்கமாக இருந்தது.

நாராயணமூர்த்தி பேசுகையில், இன்போசிஸ் போர்டை விட்டு நான் விலகும் இந்த நேரத்தில், இன்போசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட் பி1 விசா மோசடிக் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது வருத்தம் தருகிறது, வேதனை தருகிறது. இந்த விஷயத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்போசிஸ் மீதான களங்கம் துடைக்கப்படும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

கடந்த மே மாதம் அமெரிக்க கோர்ட் ஒன்று இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில், பி1 வர்த்தக விசாவைப் பெற்றது தொடர்பான ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்குமாறு அது உத்தரவிட்டிருந்தது.

இன்போசிஸ் நிறுவன முன்னாள் ஊழியர் ஜேக் பால்மர் என்பவர் இதுதொடர்பான வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

நாராயணமூர்த்தி தொடர்ந்து பேசுகையில், எனது கடைசி உரையை நிகழ்த்துவது எனக்கு எளிதாக இல்லை. கடந்த கால நினைவுகள் எனது மனதில் நிழலாடுகிறது.

இன்போசிஸ் தனது 30வது ஆண்டில் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. புதிய வாய்ப்புகளில் இன்போசிஸ் புக வேண்டிய நேரம் இது.

ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், எனது வாழ்க்கை நல்ல நம்பிக்கையூட்டும் பாடமாக அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வரும் ஆண்டுகளில் நமது வாடிக்கையாளர், பணியாளர், முதலீட்டாளர் உறவு மேலும் வலுப்பட வேண்டும். ஒரு டெக்னாலஜி நிறுவனமாக உருவெடுத்து இன்று வர்த்தக தீர்வுக்கான நிறுவனமாக இந்போசிஸ் மாறியிருக்கிறது என்றார் அவர்.

ஆகஸ்ட் 20ம் தேதியுடன் நாராயணமூ்ர்த்தி இன்போசிஸ் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1981ம் ஆண்டு வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் நாராயணமூர்த்தி உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து இன்போசிஸ் சாம்ராஜ்யத்தை எளிய முறையில் தொடங்கினர். இன்று இந்தியாவின் 2வது மிகப் பெரிய ஐடி நிறுவனமாக இன்போசிஸ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இன்று உலகெங்கும் 1.3 லட்சம் ஊழியர்களுடன், 6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கூடியதாக இன்போசிஸ் கிளை பரப்பி நிற்கிறது. நாஸ்டாக்கிலும் இது பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.

சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கே.வி.காமத் நியமிக்கப்பட்டார். நாராயணமூர்த்திக்குப் பிறகு காமத்தான் இன்போசிஸை வழி நடத்திச் செல்லப் போகிறார்.

புதிய தலைமைச் செயலதிகாரியாக ஷிபுலால் நியமிக்கப்பட்டுள்ளார். இணைத் தலைவராக எஸ்.கோபாலகிருஷ்ணன் செயல்படுவார்.

English summary
Infosys founder NR Narayana Murthy on Saturday said he was hurt by B1 visa fraud charge inflicted by a US court on the company. Murthy was addressing the shareholders of Infosys at its 30th AGM in Bangalore, which was Murthy’s last as the chairman of the board. “As I leave the board, I feel sad that Infosys has been issued a subpoena by a grand jury in the US on the B1 issue. The issue will be decided on its merits in due course, ”Murthy said.

கருத்துகள் இல்லை: