![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje8nHmm_lsXNI6eVYgsE76qRIthnjG5zoxGOi-E0WygJUaohVSFO8gMIC5LpiKp7CuPQIGP9bYYLfRd6F_0ZDHt3CtWdNjLCGNOzEggYhCq1dKxHOdw1TbPoPB01sL6UEsfIyUBv9NcMTJ/s320/53165066_2342843655739506_1625080586739646464_n.jpg)
பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கத் தேவையில்லை. அதுவும் தமிழகத்தில் தேவையே இல்லை. எவ்வளவு ஏழை என்றாலும் ஒரு பிராமணர் பிழைத்துக்கொண்டு கெளரவமான வாழ்வு வாழ்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் இங்கே செய்யப்பட்டிருக்கின்றன. எந்த வேலையும் கிடைக்காத பிராமணர்கூட பிராமணர் என்பதால் மட்டுமே த்விஜஸ்தம்பம் இல்லாத வைதீகப் பிரதிஷ்டை கோயில்கள் (தனியார் கோயில்களில்) அர்ச்சகராக இருக்க முடியும். புரோகிதம், வைதீக காரியங்களுக்குச் சென்று பிழைத்துக்கொள்ள முடியும்.
இட ஒதுக்கீட்டால் வாழ்க்கையை இழந்த பிராமணர் யாருமே இல்லை அதிகபட்சம் அவர் படிக்க விரும்பிய உயர்க்லவியை, பெற விரும்பிய அரசுப் பணியை இழந்திருப்பார். 69% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட பிறகும் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் அரசுப் பணிகளிலும் உயர்கல்விகளிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் பல துறைகளில் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் அவர்களே அதிகமாக இருக்கிறார்கள்். இதற்கெல்லாம் அவர்கள் திறமையும் அறிவும் காரணமாக இருக்கும் என்றாலும் இவற்றுக்கான திறமையையும அறிவையும் பெற்றுக்கொள்வதற்கான சமூகச் சூழல் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.
ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறக்கும் பிராமணருக்கு எதைப் படித்தால் வாழ்வில் முன்னேறலாம் என்று சொல்லிக்கொடுக்க அவரது சுற்றத்தில் யாரேனும் ஒருவராவது இருப்பார்கள். எனக்கு குடும்பத்திலேயே இருந்தார்கள். முதல் தலைமுறைப்பட்டதாரிகளான் என் அப்பாவும் சித்தப்பாவும் அத்தைகளும் மாமாக்களும் ஆங்கிலப் படிக்க வேண்டியதன் அவசியத்தை எனக்குப் புகட்டிக்கொண்டே இருந்தார்கள் இன்று நான ஓரளவு நல்ல நிலையில் இருப்பதற்கு அது பெருமளவில் காரணம்.
மாறாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பிறந்த பலருக்கு இந்த வாய்ப்புகள் கிடையாது. பல சாதிகளில் இப்போதுதான் முதல்தலைமுறைப் பட்டதாரிகள் உருவாகியுள்ளனர். சில சாதிகளில் இன்னுமும்கூட உருவாகவில்லை. எனவே சமூகரீதியாக இன்னும் பின்தங்கியுள்ள சாதிகளைக் கண்டறிந்து இட ஒதுக்கீடு பலன்கள் அவர்களைச் சென்றுசேவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கான இட ஒதுக்கீடை அதிகரிக்க வேண்டும் உள் ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் கலைஞர் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு கொடுத்தது அத்தகையதுதான்.
ஆனால் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டை வகுப்புவரி இட ஒதுக்கீடு பெறாத பிரிவினருக்குக் கொடுப்பது பச்சையான அயோக்கியத்தனம். அதுவும் பல மாநிலங்களில் அவர்கள் இருக்கும் விகிதத்தைவிட அதிகமான விகிதத்தில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். மேலும் 8 லட்சம் வருமான வரம்பை நிர்ணாயித்திருப்பது உண்மையிலேயே பொருளாதாரத்தில் பின் தங்கிய பிராமணர்களைக் காட்டிலும் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க பிராமணர்கள். மற்றும் இதர உயர்சாதியினருக்கே அதிக சாதகத்தைக் கொடுக்கும். ஸ்டேட் பாங்க் கட் ஆஃப் விவகாரத்தைப் பார்த்தால் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை திரும்பிவிடும் போலிருக்கிறது. அதாவது பிராமணர்களே அதிக அரசு பதவிகளில் வருவார்கள் போலிருக்கிறது. இது துளியும் நியாயமற்றது. இத்தனை ஆண்டு சமூக நீதி அரசியலுக்கும் அவற்றால் விளைந்த நன்மைகளுக்கும் சாவுமணி அடிப்பதைப் போன்றது.
அன்புள்ள பிராமணர்களே அரசு பணிகளிலும் உயர்கல்வியிலும் உங்கள் முன்னோர்கள் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தைப் பிடித்து வைத்திருந்தனர். அதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு இன்னுமும் கூட முறையான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்குக் கொஞ்சம் வழிவிடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக