ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சசிகலா புஷ்பாவுக்கு எதிரான புகார்: பெண் வக்கீல், 2 பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

 நெல்லை சசிகலா புஷ்பா எம்.பி.க்கு எதிராக புகார் அளித்த 2 சிறுமிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜரான பெண் வக்கீல் ஆகியோருக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு நாடார் மக்கள் பேரவை மாநில தலைவர் குமரேசன், சசிகலா புஷ்பா எம்.பி. மீது பாலியல் புகார் அளித்த பானுமதி உள்பட 2 பெண்கள் மற்றும் புகார் அளித்த பெண்களுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜரான வக்கீல் சுகந்தி ஆகியோர் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் ‘‘சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது தரப்பினரால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு’’ கேட்டு உள்ளனர்.
பின்னர் நாடார் மக்கள் பேரவை மாநில தலைவர் குமரேசன் நிருபர்களிடம் கூறியதாவது:– மிரட்டப்பட்டனர் சசிகலா புஷ்பா எம்.பி.க்கு ஆதரவாக எந்த நாடார் அமைப்பும் இல்லை. நாடார்களை பாதுகாக்க பதிவு செய்யப்பட்ட பல்வேறு நாடார் சங்கங்கள் உள்ளன. சசிகலா புஷ்பாவை தாதுமணல் கும்பல் இயக்கி வருகிறது.

சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்த 2 பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து உள்ளன. இது தொடர்பாக புகார் அளித்த 2 பெண்களும் மிரட்டப்பட்டார்கள். தற்போது அவர்களுக்கு ஆதரவாக வக்கீல் சுகந்தி கோர்ட்டில் ஆஜராகி உள்ளார். இதனால் சசிகலா புஷ்பா எம்.பி. வழிகாட்டுதலின் பேரில் வக்கீல் சுகந்தி வீட்டை சூறையாடி உள்ளார்கள்.

பாதுகாப்பு தேவை தாதுமணல் எடுக்க அரசு தடையாக இருக்கிறது. எனவே அரசையும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவையும் மிரட்டுவதற்கு சசிகலா புஷ்பா எம்.பி.யை பயன்படுத்துகிறார்கள். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பாவுக்கு அ.தி.மு.க. குறித்தும், முதல்–அமைச்சர் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் குறித்தும் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. எனவே வக்கீல் சுகந்திக்கும், 2 வேலைக்கார பெண்களுக்கும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்து உள்ளோம்.

தற்போது பெண் வக்கீலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ராதாபுரம் தொகுதி இன்பதுரை எம்.எல்.ஏ., வக்கீல் வீட்டை சூறையாடியவரிடம் போனில் பேசியிருப்பதை பார்க்கும் போது அவர் சசிகலா புஷ்பா எம்.பி.க்கு ஆதரவாக செயல்படுகிறாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பெண் வக்கீல் இதுகுறித்து வக்கீல் சுகந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் அ.தி.மு.க. உறுப்பினர் கிடையாது.
சசிகலா புஷ்பா எம்.பி.க்கு எதிராக புகார் அளித்த பெண்கள் தங்களுக்காக கோர்ட்டில் ஆஜராகுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர். இதையொட்டி நான் கோர்ட்டில் ஆஜர் ஆனேன்.

ஆனால் இதற்காக சிலர் என்னை தொடர்ந்து மிரட்டினார்கள். தற்போது எங்களது வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்கள். நானும், 2 பெண்களும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான். சட்டரீதியாக செயல்பட்ட எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். இந்த மிரட்டலுக்கு நான் பயப்படப்போவதில்லை. 2 பெண்களுக்கும் நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன்’’ என்றார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: