வெள்ளி, 3 செப்டம்பர், 2010

திரைப்படத் தயாரிப்பாளர் ஜின்னாவைக் கடத்தியது யார்?

சென்னையில் வாங்கிய கடனுக்காகவே தயாரிப்பாளர் ஜின்னாவை அடியாட்களை வைத்து கடன் கொடுத்தவர்கள் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜின்னா கிரியேஷன்ஸ் தலைவரும், திருச்சி திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவருமான ஜின்னா திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெமினா ஷாப்பிங் மகாலில் நூடுல்ஸ் கடையை இன்று மாலை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானியை அழைத்துள்ளனர். கடை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை ஜின்னா கவனித்து வந்தார்.

இந்த நிலையில், இன்னோவா காரில் வந்த ஒரு கும்பல் ஜின்னாவை சரமாரியாக அடித்து உதைத்து காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு பறந்தது.

இதையடுத்து ஜின்னாவுடன் இருந்த அவரது உதவியாளர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவர் சென்னையில் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. அதைக் கொடுத்தவர்கள்தான் ஆட்களை வைத்து ஜின்னாவைக் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை பத்திரமாக மீட்க போலீஸார் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.

ஜின்னா, விஜய் நடித்த போக்கிரி, சிவகாசி, விஷால் நடித்த தாமிரபரணி ஆகிய படங்களை வாங்கி விநியோகித்தவர் ஆவார். மேலும், ஜின்னா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் சேவல் படத்தை தயாரித்தார். இதில் பரத்தும், பூனம் பாஜ்வாவும் நடித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: