வெள்ளி, 3 செப்டம்பர், 2010

சூப்பர் பக் ஆய்வு மேற்கொண்ட 5 விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

டெல்லி: சூப்பர் பக் ஆராய்ச்சி மேற்கொண்ட ஐந்து இந்திய விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவிலிருந்து எந்த மருந்துக்கும் கட்டுப்படாத சூப்பர் பக் எனப்படும் பாக்டீரியா பரவுவதாக ஆய்வுக் கட்டுரையை இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

தி லேன்சட் என்ற இங்கிலாந்து இதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தியில், இந்தியாவிலிருந்து நியூடெல்லி மெடல்லோ பீட்டா லேக்டமேஸ் என்ற பாக்டீரியா பரவி வருவதாகவும், இது எந்தவிதமான ஆன்டி பயாடிக் மருந்துக்கும் கட்டுப்படாது என்றும், உலகம் முழுவதும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த நோய் தாக்கினால் உடல் முழுவதும் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படும் எனவும் அது கூறியுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் ஏஎல்எம் போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேசிக் மெடிக்கல் சயின்ஸ், மைக்ரோபயாலஜி துறையைச் சேர்ந்த கார்த்திகேயன் குமாரசாமி, அரியானாவைச் சேர்ந்த பி.டி.சர்மா ஆகிய இருவரும் வாரணாசி, கொச்சி, கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினர்களுடன் சேர்ந்து தான் சூப்பர் பக் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சியாளர்களின் கட்டுரையையும், இந்தியாவில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளையும் வைத்து ஆராய்ந்த பிறகு தான் இந்த கட்டுரையை வெளியிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இது மிகத் தவறான செய்தி என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. மேலும், இந்த சூப்பர் பக் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ள அந்த 5 பேருக்கும் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

யார் அனுமதி பெற்று அவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள் என்றும், இது குறித்து இன்னும் 2 வாரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: