ஞாயிறு, 28 ஜூலை, 2019

10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலையில் மீண்டும் நான்கு வழிபாதை போக்குவரத்து 3-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது

10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலையில் மீண்டும் நான்கு வழிபாதை போக்குவரத்து 3-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறதுdailythanthi.com : மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலையில் மீண்டும் நான்கு வழிப்பாதை போக்குவரத்து வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வந்ததால் அண்ணாசாலை, பூந்தமல்லி சாலைகளில் பல்வேறு இடங்களில் இருவழிப்பாதை போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகயும், 4 வழிப்பாதை போக்குவரத்து இருவழிப்பாதை போக்குவரத்தாகவும் மாற்றப்பட்டு இருந்தன. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட 2009-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இதனால் பல்வேறு வகைகளில் இடையூறு ஏற்பட்டு வந்தது.


தற்போது மெட்ரோ ரெயில் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து, சாலைகளில் வழக்கம் போல் இருவழி போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து இந்த சாலை முழுவதும் மீண்டும் நான்கு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளன.

அண்ணா சாலை

சென்னையின் இதயப்பகுதியான அண்ணாசாலையில் மட்டும் பணிகள் இழுத்துக்கொண்டே வந்தது. இதனால் அண்ணாசாலையில் தலைமை தபால் நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி செல்பவர்கள் ராயப்பேட்டை செல்லும் சாலை வழியாக சுற்றிக்கொண்டு செல்லவேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் அலுவலக நேரங்களில் இந்தபகுதியில் 2 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு அரை மணிநேரத்துக்கு மேல் ஆகி வந்தது. அத்துடன் தேவையில்லாத எரிபொருள் செலவும், நேரமும் வீணடிக்கப்பட்டு வந்தது.

இந்தபாதையில் பணிகளை விரைந்து முடித்து, இருவழிப்பாதையை மீண்டும் நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வந்தன. தற்போது இந்தசாலையில் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சிக்னல்கள் அகற்றம்

சென்னை மாநகரில் மெட்ரோ ரெயில் பணிக்காக பூந்தமல்லி சாலை மற்றும் அண்ணாசாலையில் இடையூறாக இருந்த போக்குவரத்து சிக்னல்கள், பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள், சாலை தடுப்புகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீஸ் அனுமதியுடன் அகற்றப்பட்டன.

தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்து ரெயில் இயக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட சிக்னல்கள், சாலை தடுப்புகள், நடைபாதைகள் மீண்டும் அமைத்து தரப்பட்டன. அதனடிப்படையில் பூந்தமல்லி சாலையில் முழுவதுமாக நான்கு வழிப்போக்குவரத்து நடந்து வருகிறது.

3-ந்தேதி முதல் அமல்

அண்ணாசாலையிலும் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், சாலையில் அப்புறப்படுத்தப்பட்ட சிக்னல், தடுப்பு உள்ளிட்டவைகளை மீண்டும் அமைத்து கொடுக்கப்பட்டு படிப்படியாக நான்கு வழிப்பாதை போக்குவரத்து நடந்து வருகிறது.

கடைசியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து எல்.ஐ.சி. வரை இரு வழிப்பாதையாகவே தான் இருந்து வருகிறது. இந்த பாதையையும் நான்கு வழிப்பாதையாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதையடுத்து இந்த பகுதியிலும் தற்போது பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையிடம் வரும் 3-ந்தேதி (சனிக்கிழமை) ஆடிப்பெருக்கு அன்று சாலை ஒப்படைக்கப்படுகிறது. அன்று முதல் ஆயிரம் விளக்கு-எல்.ஐ.சி. வரையிலான அண்ணாசாலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான்கு வழிப்பாதையில் போக்குவரத்து தொடங்குகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்

கருத்துகள் இல்லை: