செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

என்கவுண்ட்டர் வெள்ளதுரை சசிகலா பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை

 மின்னம்பலம் - Kavi : பசும்பொன்னில் நடைபெறும் சசிகலாவின் பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளதுரை கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினார்.
“களம் காண்போம்… அம்மாவின் ஆட்சி அமைப்போம்” என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பசும்பொன், அருகே கமுதியில் இன்று (பிப்ரவரி 24 – ஜெயலலிதா பிறந்தநாள்) பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார்.
இதற்கு அதிமுக கொடி கட்டிய வேனில் வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளைதுரை வரவேற்புரை ஆற்றினார்.


“பொறுமை என்றால் பூமா தேவியை சொல்லுவார்கள்… ஆனால் அந்த பூமா தேவிக்கு பொறுமையாக எப்படி இருப்பது என பாடம் நடத்துவதற்கு ஆற்றல்மிக்க எங்கள் தாயே” என்று சசிகலாவுக்கு புகழாரம் சூட்டினார்.

“1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் , எனக்குத் தாயாக, சகோதரியாக, தோழியாக இருந்தவர் என்று உங்களை பெருமிதத்தோடு குறிப்பிட்டார். அப்படிப்பட்ட உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி” என்று வரவேற்று பேசினார்.

யார் இந்த வெள்ளதுரை?

தமிழக காவல்துறையில் எஸ்.ஐ-யாக 1997-ல் பணியில் சேர்ந்தவர் வெள்ளதுரை. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் எஸ்.ஐயாக முதன்முதலில் பணியில் சேர்ந்தார்.

2004ல் வீரப்பன் இருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று அவரை என்கவுண்ட்டர் செய்த சிறப்பு படையில் இடம் பெற்றவர் இந்த வெள்ளதுரை. தனது பணி காலத்தில் 12 எண்கவுண்ட்டர்களை செய்திருக்கிறார்..

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று வர்ணிக்கப்பட்ட ஏடிஎஸ்பி வெள்ளத்துரை கடந்த 2024 மே 30ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மே 31ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளத்துரை பணி செய்தபோது, போலீஸ் காவலில் நடந்த மரணம் குறித்த விசாரணையின் முடிவில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: