செவ்வாய், 24 ஜனவரி, 2017

இங்கே யார் சமூக விரோதிகள்? யார் வன்முறைக் கும்பல்?

திரும்பத் திரும்ப ஒன்று சொல்லப்படுகிறது. மாணவர்கள் அறவழியில்தான் போராடினார்கள். அதற்குள் புகுந்த சமூக விரோதிகள்தாம் வன்முறைக்கும்பல் என்பது ஒரு பொதுஜனக் கருத்தாக கட்டமைக்கப்படுகிறது.
மாணவர்கள் உறுதியாக அறவழியில் ஈடுபட்டார்கள் என்பது உண்மை. அவர்கள் தாக்குதல்களுக்குள்ளானபோது அவர்களுக்கு அரணாகவும், ஆதரவாகவும் இருந்தது விளிம்புநிலையைச் சேர்ந்த மீனவ மக்கள், எளிய மக்களுமே.
காலம் காலமாக இந்த அமைப்பினால் சுரண்டப்பட்ட, அதிகார வர்க்கத்தால் நசுக்கப்பட்ட அவர்கள், போலீஸ் அடிக்கும்போது திருப்பி அடிக்கவேச் செய்வார்கள். போலீஸ் கல்லெறிந்தால் திருப்பி எறியவேச் செய்வார்கள். அதுதான் நியாயமும். அவர்களை சமூக விரோதி என்றும், வன்முறைக் கும்பல் என்றும் எப்படிச் சொல்ல முடியும்.
மாணவர்களுக்கு ஆதரவாக நின்று, போலிஸை எதிர்த்தவர்களைத் தேடுகிறோம் என்று மக்களின் வசிப்பிடங்கள், தெருக்களில் போலீஸின் வன்முறை, கோரத்தாண்டவமாய் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. பொருட்களும் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. சமூக விரோதிகள் என பலரை கைது செய்திருக்கிறது. இங்கே யார் சமூக விரோதிகள்? யார் வன்முறைக் கும்பல்?
எந்தக் காரணமும் இல்லாமல், எந்த நியாயமும் இல்லாமல் போலிஸ் விரட்டி விரட்டி மிருகங்களைப் போல மக்களை வேட்டையாடும். அதை லேசான தடியடி செய்து கலைத்தனர் என்று காவல்துறையும், அரசும், ஊடகங்களும் சொல்லும். அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு இந்தக் கேள்விகள் எழ வாய்ப்பில்லை.

மாணவர்களைப் போற்றும் நாம், எந்த பிரதிபலனும் இல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக நின்று, அடி வாங்கி, போலீஸால் கைது செய்யப்பட்டு, காலாகாலத்துக்கும் அலைக்கழிக்கப்பட இருக்கும் அந்த சாமானியர்களை நமது பாழாய்ப் போன பொதுபுத்தியில் நினைவில் கொள்ளத் தவறினாலும், சமூக விரோதிகள் என்றாவது சொல்லாமல் இருப்போம்!  முகநூல் பதிவு   மாதவா ராஜ்

கருத்துகள் இல்லை: