ஞாயிறு, 27 நவம்பர், 2016

பஞ்சாப் சிறை தகர்ப்பு .. தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர் ! தலைவர் ஹர்மிந்தர் சிங் உட்பட ...


பாட்டியாலா, பஞ்சாப் சிறைத் தகர்ப்பில் காலிஸ்தான் விடுதலைப்படை தலைவர் உள்பட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிஉயர் உஷார் படுத்தப்பட்டு உள்ளது. முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் நாபா நகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் காலிஸ்தான் விடுதலைப்படை தலைவர் ஹர்மிந்தர் மின்ட்டோ உள்பட ஏராளமான தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். காலையில் போலீஸ் சீருடையில் ஆயுதம் தாங்கிய 10 பேர் சிறைக்குள் புகுந்தனர். போலீஸ் என கூறி இருவர்களை கையில் விலங்கிட்டு அழைத்து வந்து பாதுகாவலர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு உள்ளே சென்றுவிட்டனர். அப்போது தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். இதனால் சிறை வளாகத்துக்குள் பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

அவர்கள் காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மிந்தர் சிங் என்கிற மின்ட்டோவையும் இன்னும் சில கைதிகளையும் விடுவித்தனர். அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி சிறைக் காவலர்களை அச்சுறுத்தியவாறே அவர்களை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறினர். மின்னல் வேகத்தில் தாங்கள் வந்த வாகனங்களில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த தகவல் உடனடியாக மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து மர்ம கும்பல் தப்பிவிட முடியாதவாறு பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் எல்லைகளை போலீசார் சீல் வைத்தனர். 

மேலும் அருகாமையில் உள்ள 11 மாநில போலீசார் உடனடியாக உஷார் படுத்தப்பட்டனர். தப்பிச் சென்றவர்கள் உத்தரபிரதேச மாநிலத்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிறைச்சாலைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி கைதிகளை விடுவித்து சென்ற கும்பலை பிடிக்க உடனடியாக சிறப்பு அதிரடிப்படையை மாநில அரசு அமைத்தது. மேலும், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளின் பெயர்களை நபா நகர போலீசார் உடனடியாக வெளியிட்டனர். அவர்களில் காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மிந்தர் சிங் மின்டு மற்றும் விக்கி கொண்டார், குர்பிரீத் செகான், நீட்டா தியோல் விக்ரம்ஜித் ஆகிய 6 கைதிகள் அடங்குவர். 

ஆனால், காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதி கல்வாட்டி என்ற பயங்கரவாதியும் இவர்களுடன் சேர்ந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
ஹர்மந்தர் சிங் மீது 2008-ம் ஆண்டு சிர்சா நகரைச் சேர்ந்த தேரா சச்சா சவுதா இயக்கத் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் என்பவரை தீர்த்துக் கட்ட முயற்சித்தது உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளன. அப்போது அவரிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 
6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இவர் 2014-ம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், நபா சிறையில் அடைக்கப்பட்டார்.

பஞ்சாபில் பல வருடங்களுக்கு முன்பு காலிஸ்தான் தனிநாடு கேட்டு பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினார்கள். ராணுவ நடவடிக்கை மூலம் இந்த போராட்டம் ஒடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் விடுதலை இயக்க பயங்கரவாதிகளும் ஒடுக்கப்பட்டனர்.  

சிறை தகர்ப்பு சம்பவத்தை அடுத்து நாபா சிறைச்சாலையின் சூப்பிரண்ட் மற்றும் துணை சூப்பிரண்ட் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பஞ்சாப் துணை முதல் மந்திரி சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணையும் முடக்கிவிடப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளநிலையில் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் அவசர மந்திரிசபை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார் தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை: