செவ்வாய், 27 செப்டம்பர், 2011

புகழ் பெற்ற காளைச் சண்டைக்கு பார்சிலானோ குட்பை- 2012

புகழ் பெற்ற காளைச் சண்டைக்கு பார்சிலானோ குட்பை- 2012 முதல் முழுமையாக தடை

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டின் புகழ் பெற்ற காளைச் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. நேற்று இந்த காளைச் சண்டையின் கடைசிப் போட்டி பார்சிலோனாவில் நடைபெற்றது. 2012 முதல் காளைச் சண்டைக்குப் பெயர் பெற்ற காட்டலோனியா பிராந்தியம் முழுவதும் காளைச் சண்டைக்குத் தடை விதிக்கப்படுகிறது.
எப்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரபலமாக உள்ளதோ அதேபோல ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டு இந்த காளைச் சண்டை. கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு படத்தில் கூட இந்த காளைச் சண்டைக் காட்சியை வைத்திருப்பார்கள். நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த பழம் பெறும் வீர விளையாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று விலங்கின ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதனால் அவர்களுக்கும், காளைச் சண்டைப் பிரியர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதலும் வெடித்து வந்தது.

ஸ்பெயினின் காட்டலோனியா பிராந்தியத்தில்தான் இந்த விளையாட்டு பிரபலமானது. தற்போது இந்தப் பிராந்தியத்தில் காளைச் சண்டைக்குத் தடை விதிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. இதையடுத்து பார்சிலோனாவில் நேற்று கடைசி காளைச் சண்டை நடந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்ட சீட்களைக் கொண்ட அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

காளைச் சண்டைப் பிரியர்கள் கடைசிச் சண்டையை மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு பார்வையிட்டு ரசித்தனர். பார்சிலோனாவின் லா மொனுமென்டல் அரங்கில் இந்த விளையாட்டு நடந்தது.

இந்தத் தடை காரணமாக காளைப் பிரியர்கள் பெரும் சோகமடைந்துளளனர். அதேசமயம், இந்தத் தடைக்காக போராடி வந்த எதிர்ப்பாளர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இனி காளைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

லத்தின் அமெரிக்க நாடுகளில் இந்த காளைச் சண்டை பிரபலமானது. இருப்பினும் ஸ்பெயினில் அதிலும் பார்சிலோனாவில் நடக்கும் காளைச் சண்டைதான் மிகப் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: