புதன், 27 ஜூலை, 2011

கே.என்.நேரு:நாங்கள் தவறு செய்து இருந்தால் தண்டனையை அனுபவிக்க தயா


திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலைஞர் அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க. அரசு வேண்டும் என்றே பொய்வழக்கு போட்டு வருகிறது. திருச்சியை பொறுத்தவரை மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர் காஜாமலை விஜய் மற்றும் குடமுருட்டி ஆறுமுகம் ஆகியோர் மீது போலீசார் மூலம் பொய்வழக்கு போடப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே போல தி.மு.க. பிரமுகர் மூர்த்தி மீதும் பொய் வழக்கு போட முயற்சி நடக்கிறது. இந்த நிலையில் என்மீதும் துணை மேயர் அன்பழகன் மீதும் நாமக்கலை சேர்ந்த டாக்டர் கதிர்வேல் போலீசாரிடம் பொய்யான புகார் கொடுத்து உள்ளார்.

அதில் நாங்கள் இருவரும் அவரை மிரட்டி சொத்தை அபகரித்ததாக தெரிவித்து உள்ளார். விரைவில் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வர உள்ளது.
இதனால் எங்கள் மீது பொய்யான புகார் அளித்து பொதுமக்கள் மத்தியில் எங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.

நாங்கள் தப்பு செய்து இருந்தால் தண்டனை அனுபவிக்க தயார் நாங்கள் யார் நிலத்தையும் அபகரிக்கவில்லை. நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கை சந்திப்போம்.

திருச்சியில் உள்ள ஒரு அ.தி.மு.க. பிரமுகர் கிராப்பட்டி ராணுவமைதானம் அருகே உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை 3 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 டாக்டர் கதிர்வேல் ஏற்கனவே 9.1.2008-ல் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அதில் எங்களது பெயர்கள் இடம்பெறவில்லை.

ஆனால் இப்போது எங்களது பெயர்களை குறிப்பிட்டு புகார் கூறி உள்ளார். டாக்டர் கதிர்வேல் மீது சேலத்தில் உள்ள ஐ.ஓ.பி.பாங்கியில் அவரது சொத்துக்களை ஜப்தி செய்து உத்தரவிட்டு 18.8.2008ல் பத்திரிகையில் விளம்பரம் வெளியானது.

டாக்டர் கதிர்வேல் முதலில் போலீசில் புகார் செய்தார். பிறகு சி.பி.ஐ.விசாரணைக்கு கோரி கோர்ட்டுக்கு சென்றார்.

மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தள்ளுபடியானது. பின்னர் ஐகோர்ட்டிலும் இந்த வழக்கு தள்ளுபடியானது.அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு போட்டார். பின்னர் அதை அவரே வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது திருச்சி போலீசில் பொய்புகார் கொடுத்து உள்ளார்’’என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: