மின்னம்பலம் - christopher : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து ஆலோசிக்க வரும் நவம்பர் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் இன்று (அக்டோபர் 27) அறிவித்தார்
ஏற்கெனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து திமுக கூட்டணித் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதனையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் – பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம்.
அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.
மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக