வெள்ளி, 19 ஜூலை, 2024

வேட்டிக்கு தடைவிதித்த வணிக வளாகத்தை மூட கர்நாடக அரசு உத்தரவு!

 dinamani.com : பெங்களூருவில் உள்ள ஜிடி வேர்ல்ட் வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து சென்ற முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் வணிக வளாகத்தை ஒரு வாரத்துக்கு மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் சுரேஷ், சட்டப்படி, வணிகவளாகத்தை ஏழு நாள்களுக்கு மூடலாம். புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே அதிகாரிகளிடம் இதுபற்றி பேசினேன்.
வேட்டி அணிந்துவந்த விவகாரத்தால் வணிகவளாகம் ஏழு நாட்களுக்கு மூடப்படும். அமைச்சர் சுரேஷின் அறிவிப்பைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் யு.டி.காதர் இந்த முடிவை ஆதரித்து, உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தினார்.



முன்னதாக, பெங்களூருவில் உள்ள ஜிடி வேர்ல்ட் வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து சென்ற முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஜிடி வேர்ல்ட் வணிக வளாகத்தில் திரைப்படம் பார்ப்பதற்கு 70 வயதான விவசாயி ஃபக்கீரப்பா தனது மகன் நாகராஜுடன் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு நேற்றுமுன்தினம் (ஜூலை 16) சென்றுள்ளார். ஆனால், ஃபக்கீரப்பா வேட்டி அணிந்து சென்றதால், மாலின் பாதுகாப்புக் காவலர்கள் அவர்களை வணிக வளாகத்தினுள்ளே அனுமதிக்கவில்லை.

இதைக்கண்டித்து ஜிடி வேர்ல்ட் வணிகவளாக நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அப்பகுதி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகையும் மாடலுமான கௌஹர் கான் இன்ஸ்டாகிராமில் இந்த சம்பவத்தை கண்டித்து, “இது முற்றிலும் வெட்கக்கேடானது. மால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இந்தியா, நாம் அனைவரும் நமது கலாசாரத்தைப் பற்றி பெருமைப்பட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

dinamani
தாய், தந்தையை தாக்கிய வழக்கு: மகனுக்கு 3 ஆண்டுகள் சிறை

தாய், தந்தையைத் தாக்கிய வழக்கில் மகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்பளித்தது.

புதுச்சேரி, திருக்கனூா் பகுதி சோரப்பட்டைச் சோ்ந்தவா் மாசிலாமணி (70). மனைவி இந்திராணி (60). தம்பதிக்கு பழனிவேல் என்ற மகன் மற்றும் 2 மகள்கள். மகள்களில் ஒருவா் இறந்துவிட்ட நிலையில், தனது சொத்தை மகன், மகளுக்கு கடந்த 2016- ஆம் ஆண்டு மாசிலாமணி பிரித்துக் கொடுத்தாரம். இதில், திருப்தியடையாத பழனிவேல் அடிக்கடி தாய், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில், மகளுக்கான நிலத்தை அளவீடு செய்து கொடுக்க மாசிலாமணி கிராம நிா்வாக அதிகாரி உள்ளிட்டோருடன் சென்றுள்ளாா். இதனால், ஆத்திரமைடைந்த பழனிவேல் தனது தந்தை மற்றும் சகோதிரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவா்களைத் தாக்கினாராம். மேலும், வீட்டிலிருந்த தாய் இந்திராணியையும் அவா் தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பழனிவேலை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் கணேஷ்ஞானசம்பந்தன் ஆஜரானாா்.

விசாரணையின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட பழனிவேலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி டி.பாலமுருகன் வியாழக்கிழமை தீா்பளித்தாா்.

கருத்துகள் இல்லை: