ஞாயிறு, 18 டிசம்பர், 2016

முன்னாள் பிரதமர்களை அவமதிக்கும் மோடி- காங்கிரஸ் கண்டனம்!

minnambalam.com :முன்னாள் பிரதமர்களை அவமரியாதை செய்வதை நரேந்திர மோடி நிறுத்த வேண்டுமென, காங்கிரஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. 1971ஆம் ஆண்டு, அதிக மதிப்புள்ள பணத்தாள்களை மதிப்பு நீக்கம் செய்ய வேண்டுமென வாஞ்சூ கமிட்டி கேட்டுக் கொண்டதற்கு, இந்திரா காந்தி முக்கியத்துவம் கொடுக்கவில்லை என பிரதமர் ஒரு புத்தகத்தின் பத்தியை குறிப்பிட்டதற்கே, காங்கிரஸ் இப்படி எதிர்வினையாற்றியிருக்கிறது.
“முன்னாள் பிரதமர்களை அவமரியாதை செய்வதை நிறுத்துங்கள். இந்த மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாயி, மன்மோகன் சிங் தொடங்கி, இந்திரா காந்தி வரை அது ஒரு நீண்ட பட்டியல். நீங்கள் அவர்களை அவமரியாதை செய்யும் போது, அவர்களை மட்டும் அல்ல, 1978ஆம் ஆண்டு பண மதிப்பு நீக்கத்தை அமல் செய்த, லால் பகதூர் சாஸ்திரியையும், மொரார்ஜி தேசாயையும் அவமரியாதை செய்கிறீர்கள்” என ராஜ்யா சபாவின் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் ஷர்மா, எஃப்.ஐ.சி.சி.ஐ கருத்தரங்கில் தெரிவித்தார்.

நரேந்திர மோடி, புத்தகம் ஒன்றை குறிப்பிட்டு, அப்போதைய நிதி அமைச்சர் ஒய்.பி.சவான், பிரதமர் இந்திராவிடம் சென்று, இந்நடவடிக்கைக்கு ஆதரவு அளித்தபோது, இந்திரா, “ஒரே ஒரு கேள்வி தான். காங்கிரஸ் கட்சி எந்த தேர்தலிலும் பங்கெடுக்காதா?” என்றார் எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் தலைவர், “1971ஆம் ஆண்டு, நமக்கு கிழக்கு பாகிஸ்தானால் பெரும் சவால்கள் இருந்தன. இந்தியாவில் பத்து மில்லியன் அகதிகள் இருந்தனர். இப்போது பங்களாதேஷ் எனப்படும் இடத்தில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. பாகிஸ்தானோடு சேர்ந்து கொண்ட சீனா, தன் படைகளை இந்திய எல்லைக்கு நகர்த்தி இருந்தது. அந்நேரத்தில் அப்படி ஒரு முடிவு எடுக்க இந்தியாவிற்கு வலிமையும், துணிச்சலும் இருந்தது” எனக் கூறினார். நேற்று, 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானோடு நடந்த போரில் இந்தியா வென்றதை நினைவுபடுத்தும் விஜய திவாஸ் தினம். “இந்நாளில் அவரை பாரட்ட வேண்டும், அவமரியாதை செய்ய கூடாது” என ஆனந்த ஷர்மா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: