'சட்டசபைத் தேர்தலில் இலவசங்கள் எதிரொலிக்காது' என்ற பிரசாரம் ஒருபுறம் இருந்தாலும், ஆளுங்கட்சியின் வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகப்படியாகவே இருக்கிறது. இந்நிலையில், சேலம், எடப்பாடியில் அ.தி.மு.க வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்துப் பிரசாரம் செய்த பிரபல செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, "தி.மு.கவும் காங்கிரஸும் ஊழல் கட்சிகள். இவர்களின் தேர்தல் அறிக்கையைவிடவும் அம்மாவின் தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தலில் பிரதானமாக இருக்கப் போகிறது. மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அம்மா கொடுத்துவிட்டார். இனி உங்கள் வீடுகளுக்குத் தேவையானது பிரிட்ஜ், வாசிங் மெஷின் மட்டும்தான். இந்தத் தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்காத பலவற்றை அம்மா வாரி வழங்குவார். வீட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான இலவசப் பொருட்களையும் அம்மா வழங்குவார்" எனப் பேசியிருக்கிறார். இதனை எதிர்பார்க்காத கட்சிக்காரர்கள், 'இப்படியொரு திட்டம் கட்சிக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. இதைப் பற்றி அம்மாவுக்கு முன்னாடியே மேடைகளில் சொல்வது எப்படிச் சரியாகும்?' எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.கவின் தலைமைக் கழக பேச்சாளர் ஒருவர், "இந்த வார இறுதிக்குள் எங்களின் தேர்தல் அறிக்கை வெளியில் வந்துவிடும். யாரும் எதிர்பார்க்காத பல நலத்திட்டங்களை அம்மா அறிவிக்க இருக்கிறார். எடப்பாடியில் நிர்மலா பேசியது அவருடைய சொந்தக் கருத்து. கட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.
இப்படியொரு விவாதத்தை மக்கள் மத்தியில் உலவவிட்டு, அதற்கான நாடித் துடிப்பை அ.தி.மு.க மேலிடம் கணிக்கிறதா? என்பதும் மிகப் பெரிய கேள்விதான்.
ஆ.விஜயானந்த்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக