திங்கள், 17 அக்டோபர், 2011

அ.தி.மு.க.வுக்கு கலவரம்!உள்ளாட்சி தேர்தல் 2011: இங்கே கடைசி நிலவரம்

பண்ருட்டி, இந்தியா: உள்ளாட்சித் தேர்தல் கடைசி நிலவரம், அ.தி.மு.க.வுக்கு பிரஷரை எகிற வைக்கும் அளவில் உள்ளது பண்ருட்டி நகராட்சி. பிரச்சாரம் முடிந்து ஓட்டளிக்க வேண்டிய நேரத்திலேயே, அ.தி.மு.க.வின் கோஷ்டிப் பூசல்கள் வாண வேடிக்கை காட்டுகின்றன. அ.தி.மு.க. வேட்பாளர் பரிதாபமாகக் காட்சியளிக்கிறார்.

கடைசி நேர நிலவரம், கலவரம் ஏற்படுத்தும் அளவில் இருப்பதாக லோக்கல் அ.தி.மு.க.வினரே ஒப்புக் கொள்கின்றனர். அ.தி.மு.க.வுக்கு முழுமையாக விழவேண்டிய ஓட்டுக்கள்கூட சிதறிப் போகின்றன என்கிறார்கள் அவர்கள். அ.தி.மு.க. பிரச்சாரமும் இங்கு மந்த கதியில்தான் நடந்திருந்தது.
அ.தி.மு.க.வில் இருந்து சிதறிய வாக்குகள், நேரே தி.மு.க. வேட்பாளருக்கு போய் விழுமா என்பதுகூட சந்தேகம் என்கிறார்கள். காரணம், அவர்களது முகாமில் இதைவிட அதிக இழுபறிகள். லோக்கல் ஆட்கள் பெரிதாக வேலை செய்யாமல் போகவே, தி.மு.க. வேட்பாளர் வெளியே இருந்து ஆட்களை அழைத்துவந்த கொடுமையும் நடைபெற்றது என்கிறார்கள்.
ஜெயலலிதா, எது நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ, அது நன்றாகவே நடந்துவிடும் போலிருக்கிறது பண்ருட்டியில்.
ஆம். கடைசி நேர நிலவரப்படி, அ.தி.மு.க., தி.மு.க., இரு தரப்பையும் ஓவர்-டேக் செய்துவிட்டு, தே.மு.தி.க. வேட்பாளர் இங்கே ஜெயித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று உள்ளது இன்றைய நிலைமை. தே.மு.தி.க. நிறுத்தியுள்ள வேட்பாளர், அவர்களது கடலூர் மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளராக இருக்கும் டாக்டர் அறிவொளி.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவுடன்தான் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது என்று நிலவும் நம்பிக்கையைத் தகர்க்க அ.தி.மு.க., தமிழகம் எங்கும் தனித்துப் போட்டியிடுகிறது. ஆனால், அதே சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.யான சிவகொழுந்து (தே.மு.தி.க.), அ.தி.மு.க. ஆதரவு இல்லாவிட்டால் ஜெயித்திருக்க முடியாது என்று லோக்கலில் ஒரு நம்பிக்கை உள்ளது.
பண்ருட்டி தேர்தல் முடிவு வரும்போது, இந்த இரு நம்பிக்கைகளில் ஏதோ ஒன்றுதான் நிலைக்க முடியும்!

கருத்துகள் இல்லை: