திங்கள், 17 அக்டோபர், 2011

அமைச்சர்கள் தலைமையில் 200 வார்டுகளில் கள்ள ஓட்டு-9 வார்டுகளில் மறு தேர்தல் கோரும் திமுக

சென்னை மாநகராட்சித் தேர்தலி்ல பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக 9 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யரிடம் நேரடியாக மனு கொடுத்துள்ளது. இந்த மனுவை சென்னை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியம் நேரில் வழங்கினார்.
மேலும் 200க்கும் மேற்பட்ட வார்டுகளை அதிமுகவினர் கைப்பற்றி பெரும் முறைகேடுகளைச் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள மா.சுப்பிரமணியன், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தலைமையில் சரமாரியாக கள்ள ஓட்டுப் போடப்பட்டதாகவும் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.தேர்தல் ஆணையரிடமிருந்து சரியான நடவடிக்கை இல்லாவிட்டால் உயர்நீதிமன்றத்தை திமுக நாடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று காலை தொடங்கிய சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவின்போது பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதேபோல பாமகவின் மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியும் குற்றம் சாட்டியுள்ளார்.

கள்ள ஓட்டு, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், வெப் காமராக்களைப் பொருத்தாது, மத்திய பாதுகாப்புப் படையினரை நியமிக்கத் தவறியது என திமுகவும், பாமகவும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில் திமுக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியம் இன்று மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யரை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் பல்வேறு முறைகேடுகளைக் குறிப்பிட்டு 9 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் 1வது வார்டில் 4 வாக்கு் சாவடிகள், 49, 50, 118 வார்டுகளில் அனைத்து சாவடிகள். 103வது வார்டில் 7 வாக்குச் சாவடிகள், 111வது வார்டில் 23 சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதேபோல 76 மற்றும் 117வது வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மொத்தம் 9 வார்டுகளில் மறு தேர்தல் தேவை என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

76வது வார்டில் அதிமுகவினர் பெருமளவில் கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன் கூறுகையில், தேர்தல் ஆணையரை சந்தித்து பல்வேறு வாக்குச் சாவடிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து புகார் கொடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி அதிமுகவினர் முறைகேடுகளைச் செய்துள்ளனர்.

அமைச்சர்கள் செந்தமிழன், கோகுல இந்திரா தலைமையில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன. எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், வளர்மதி, கந்தன், அசோக் ஆகியோரும் பெருமளவில் கள்ள ஓட்டுக்களைப் போட நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தேர்தல் ஆணையரிடம் கூறியுள்ளோம்.

காவல்துறையின் துணையுடன் அதிமுகவினர் கள்ள ஓட்டுக்கள் போட்டதாகவும் குற்றம் சாட்டித் தெரிவித்துள்ளோம்.

முறைகேடுகளைத் தட்டிக் கேட்ட திமுக வேட்பாளர் ஒருவரின் கணவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையும் தேர்தல் ஆணையரிடம் தெரிவித்துள்ளோம்.

தேர்தல் ஆணையர் அனைத்து புகார்களையும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் அவர் ஆரம்பத்திலிருந்தே ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து வருவதால் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது தெரியவில்லை. இருப்பினும் எங்களது கடைமையைச் செய்துள்ளோம். தேவைப்பட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றார் மா.சுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை: