ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

இனங்களுக்கிடையிலான சந்தேகப் பார்வை இல்லாதொழிய வேண்டும் : அமைச்சர் டலஸ் அழகப்பெரும!

சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் தமிழ் மக்கள் சிங்கள மக்களையும் சந்தேகத்துடன் நோக்குகின்றமை இல்லாதொழிய வேண்டுமென இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.மாத்தறை சனத்சூரிய விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;வடக்கில் இதுவரை காலமும் இடம்பெற்றது அரசியல் போராட்டம். ஆனால் யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் தமிழ் மக்கள் சிங்கள மக்களையும் நோக்குவது சந்தேக உணர்வுகளுடனேயே. இந்நிலைமை நாட்டில் இல்லாதொழிய வேண்டும் என்பதோடு மக்கள் மனதிலிருந்து அது நீக்கப்படவும் வேண்டும். அதற்காகவே பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திர முனைக்கு முன்னாள் போராளிகள் 500 பேர் ஐக்கியத்தை ஏற்படுத்தும் பொருட்டு நட்புறவு பயணமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வாழ்க்கையிலேயே முதல் தடவையாக புகையிரதம், கடல் ஆகியவற்றை முன்னாள் போராளிகள் பார்த்துள்ளார்கள். ஏன் இந்த நிலைமை? எங்கள் நாடு 65 ஆயிரத்து 610 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டது. பேசுவது இரண்டு மொழிகள் மாத்திரமே. 10 மணித்தியாலத்திற்குள் தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான பயணத்தை மேற்கொள்ள முடியும். இப்படியான நாட்டில் ஏன் இவ்வாறான ஒரு பிரிவு ஏற்பட்டது?
எனக்கு உங்களது தாய்மொழி பேச முடியாது. உங்களுக்கு எனது தாய்மொழி பேச முடியாது. இந்நாட்டில் அப்படி இருக்க முடியுமா? யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் எமக்குள் காணப்படுகின்ற சந்தேகத்தினை அகற்றுவது நாட்டின் அபிவிருத்திக்குப் பிரதான காரணியாக அமையுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கருத்தாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை வரவேற்பதுடன், நாட்டில் இனி ஒரு யுத்தம் ஏற்படாமலிருக்க இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: