செவ்வாய், 13 செப்டம்பர், 2011

விசித்ராவின் தந்தை முகமூடிக் கொள்ளையர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை

Vichitra

சென்னை: முன்னாள் கவர்ச்சி நடிகை விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ், முகமூடிக் கொள்ளையர்களால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது தாயாரைத் தாக்கிய கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த நகைகளையும், பணத்தையும் திருடிக் கொண்டு தப்பினர்.

நடிகை விசித்ராவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள செல்லம்பட்டறை ஆகும். இங்கு அவரது தந்தையின் பூர்வீக நிலங்கள், வீடு ஆகியவை உள்ளன.

இந்த வீட்டில், விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ் மற்றும் தாயார் மேரி வசந்தா ஆகியோர் தங்கியுள்ளனர். இந்தத் தம்பதிக்கு விசித்ரா உள்பட 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்து பெற்றோரை பார்த்து விட்டுச் செல்வார் விசித்ரா.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் இங்கு முகமூடி அணிந்த சிலர் புகுந்தனர். ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அந்த இரு திருடர்களும், முகமூ்டி அணிந்திருந்தனர்.வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பீரோக்களை சோதனையிட ஆரம்பித்தனர்.

சத்தம் கேட்டு விழித்த வில்லியம்ஸ், யார் அது என்று கேட்டபடி வந்தார். இதைப் பார்த்த கொள்ளையர்கள் அவரை மிரட்டி அமைதியாக இருக்குமாறு கட்டளையி்ட்டனர். பின்னர் நகைகளை எடுத்துத் தரும்படி உத்தரவிட்டனர். ஆனால் வில்லியம்ஸ் அவர்களைத் தாக்க முயற்சித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் வில்லியம்ஸை சரமாரியாக தலையில் வெட்டினர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சிறிது நேரத்தில் மரணமடைந்தார். இதைப் பார்த்த மேரி வசந்தா கதறித் துடித்தார். அப்போது அவரையும் கொள்ளையர்கள் தாக்கினர். இதில் அவரது தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார்.

அதன் பின்னர் வீடு முழுவதும் தேடிய கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ. 10,000 பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பட்டுப் புடவை உள்ளிட்டவற்றையும் கட்டிக் கொண்டு தப்பினர்.

இந்த நிலையில் இன்று காலையில் விசித்ரா வீட்டில் வேலை பார்த்து வந்த காசியம்மாள் வேலைக்காக வந்தார். அப்போது வீடு திறந்து கிடக்கவே உள்ளே போய் பார்த்த அவர் வில்லியம்ஸ் பிணமாக கிடப்பதையும், வசந்தா காயமடைந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து டி.எஸ்.பி. கஜேந்திர குமார், இன்ஸ்பெக்டர் கோபால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். வில்லியம்ஸ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வசந்தாவும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய வசந்தா, வந்த கொள்ளையர்களுக்கு வயது 20க்குள் இருக்கும் என்று கூறினார்.

கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுங்குவார்ச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமல் படத்தில் நடித்தவர்

கொல்லப்பட்ட வில்லியம்ஸ் முன்பு சினிமாவிலும் நடித்துள்ளார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த மனிதரில் எத்தனை நிறங்கள் படத்தில் சிறிய வேடத்தில் வில்லியம்ஸ் நடித்துள்ளாராம்.

கருத்துகள் இல்லை: