ஞாயிறு, 19 ஜூன், 2011

பருத்தித்துறையில் வன்புணர்வின் பின் யுவதி கொலை தொடர்பாக மூவர் கைது

வடமராட்சி பருத்தித்துறையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் பருத்தித்துறை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பருத்தித்துறை, வியாபாரிமூலைப் பகுதியைச் சேர்ந்த அரியநாயகம் துளசி (வயது – 19) என்பவர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், குறிப்பிட்ட யுவதியின் சடலம் டிசம்பர் 10 ஆம் திகதி பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.

பின்னர் இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

இதனை அடுத்து பொலிஸ் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. இதன்போது இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பருத்தித்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: