திங்கள், 20 ஜூன், 2011

மத்திய அரசு நிறுவன பெயர் பலகைகளில் ஹிந்தி, ஆங்கிலத்துடன் மாநில மொழி

மத்திய அரசு அலுவலகங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், அரசுடைமை வங்கிகளில் பெயர்ப் பலகைகள், அறிவிப்புப் பலகைகள் ஆகியவற்றில் ஹிந்தி, ஆங்கிலத்துடன் இனி அந்தந்த மாநில ஆட்சி மொழியும் இடம்பெற்றிருக்கும்.

இதற்கான முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள இரண்டாவது ஆட்சி மொழியை மத்திய அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹிந்தி முதல் மொழியாக உள்ள மாநிலங்களில் மத்திய அரசு அலுவலகங்களின் பெயர்ப் பலகைகள், அறிவிப்புப் பலகைகளில் ஹிந்தி முதலிடம் பெற்றிருக்கும். அம்மாநிலத்தின் இரண்டாவது ஆட்சி மொழியும் ஆங்கிலமும் அதன் கீழ் இடம்பெறும்.
இவ்விரண்டு மொழிகளின் வரிசையை மாநிலங்கள் முடிவு செய்யும். ஹிந்தி முதல் மொழியாக இல்லாத மாநிலங்களில், பெயர்ப்பலகைகளில், அந்த மாநில மொழி முதலில் இடம்பெற வேண்டும். இரண்டாவதாக ஹிந்தியும், மூன்றாவதாக ஆங்கிலமும் இடம்பெற வேண்டும். இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே அமலில் உள்ளது.

அனைத்து மொழிகளிலும் எழுத்துகள் ஒரே அளவில் அமைந்திருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: