கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின்போது புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகாலம் தேவையென கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் படைத்தரப்பினரும் தெரிவித்தனர்.
கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றபோதிலும், மேலும் காலாவகாசம் தேவையாகவுள்ளதெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 106 இடங்கள் கண்ணிவெடி அபாயப் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டன. இதில் 40 பிரதேசங்கள் துப்புரவு செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது 26 பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதைவிட, 18 பாரிய இராணுவ வரம்புகள் அழித்துச் சீர்செய்யப்பட வேண்டியுள்ளதாக ஹலோ ரஸ்ற் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி கூறினார்.
இவர் மேலும் தெரிவிக்கையில், தமது நிறுவனத்தின் சார்பில் 350 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் 146 பேர் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தமது பணிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் தொடர்கின்றன என்றார்.
இதேவேளை, பச்சிலைப்பள்ளியில் ஏ - 9 வீதியை அண்மித்த பகுதிகளில் படையினர் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய பகுதிகளில் ஹலோ ரஸ்ற் நிறுவனத்தினர் செயற்பட்டு வருகின்றனர். கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் செயற்பட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 18 அணிகள் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மக்கள் வாழும் பகுதிகளிலும் கண்ணிவெடி அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக