திங்கள், 5 ஜூலை, 2010

சுகாதார அமைச்சின் அதிகாரங்களில் சில மாகாண அமைச்சுக்குக் கையளிப்பு

சுகாதார அமைச்சுக்குள்ள அதிகாரங்களில் சில நேற்று மாகாண சுகாதார அமைச்சுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. நேற்று கொழும்பில் நடந்த விசேட நிகழ்வொன்றின்போது அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மாகாண அமைச்சர்களிடம் அதிகாரங்களைக் கையளித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சுய விருப்பத்துடன் எழுத்துமூலமாக அதிகாரங்களைக் கையளித்தார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் எந்தவொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் தமக்கான அதிகாரங்களை மாகாண அமைச்சர்களுக்குக் கையளித்ததில்லை. சுகாதாரத்துறை நடவடிக்கைகளை முறையாகவும் விரைவாகவும் முன்னெடுக்கும் நோக்கிலேயே இத்தகைய தீர்மானத்தை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக மத்திய அரசின் நிர்வாகத்திலுள்ள வைத்தியசாலைகளின் கண்காணிப்பு மாகாண மட்ட வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடுகள் ஏற்படுமேயானால் மத்திய அரசின் மருந்துப் பொருட்கள் விநியோகப் பிரிவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மருந்துகளைப் பெற்றுக்கொள்வது ஆகிய அதிகாரங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: